"என்ன இளங்கோ இவ இப்படியிருக்கா..." வேதனையோடு வாணி கூற...
"விடுங்க வாணிம்மா... இவளுக்கெல்லாம் புரிய வைக்கவே முடியாது... இவ எப்படி நடந்துக்கிட்டாலும், துஷ்யந்த் இவளை தேடி வர்றார்ல்ல... அதான் இவளுக்கு அவரோட மதிப்பு தெரியல...
என்னக் கேட்டா துஷ்யந்த் வீட்ல ஏற்பாடு பண்ண கல்யாணம் நடக்கட்டும்னு தான் சொல்வேன்.. கங்காவுக்காக காத்திருந்து அவர் வாழ்க்கையை வீணாக்கிக்காம, இந்த கல்யாணத்தை செஞ்சுக்கறதே நல்லது... அவராவது சந்தோஷமா வாழட்டும்... இதுக்கும் மேல கங்கா சொன்ன மாதிரி இந்தப் பேச்சை பேசறதுல ப்ரயோஜனம் இல்ல விடுங்க..." என்றவன்...
கங்கா சொன்ன மாதிரி சீக்கிரம் டிஃபன் பண்ணுங்க... மதியம் சீக்கிரம் சாப்பிட்டதால பசிக்குது.." என்றான்.
"யமுனாவுக்கு பாதி நேரம் சமையல்கட்டுல நின்னே வாழ்க்கை போய்டும் போல... " என்று புலம்பிக் கொண்டே வாணி சமையலறைக்குப் போனார்...
"கவலைப்படாதீங்க வாணிம்மா... எங்க கல்யாணம் நடக்கட்டும்... அப்புறம் உங்களை எங்கக் கூடவே கூட்டிட்டுப் போய்டறோம்... யமுனா கஷ்டப்பட வேண்டியதா இருக்காது..." என்று இளங்கோ கத்தி சொல்ல... வாணி சிரித்துக் கொண்டார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??
படிக்க தவறாதீர்கள்..
கங்காவை நினைத்து வாணி வேதனைப்பட, அவர் இயல்பு நிலைக்கு வரவே இளங்கோ அப்படி பேசினான்... ஆனால் இந்த திருமணம் நடக்க வேண்டுமா..?? என்ற குழப்பம் இளங்கோ மனதில் இருந்தது...
கங்காவையும், துஷ்யந்தையும் ஆறு வருடமாக தான் இளங்கோவிற்கு தெரியும்... கங்கா ஒரு நல்ல தோழி என்றால், துஷ்யந்த் இவனுக்கு ஒரு நல்ல வழிக்காட்டி என்று சொல்லலாம்... ஒரு டிகிரி முடிச்சதும், அப்பாவோட நண்பர் மூலமா, அவரோட சிபாரிசில் ஒரு பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தான்... அதுவரைக்கும் எந்த ஒரு குறிக்கோளும் இவனுக்கு இருந்ததில்லை...
அந்த பதிப்பகத்துல வேலைக்கு சேர்ந்ததுக்குப் பிறகு தான்... இப்படி இரு பதிப்பகம் நாமும் ஆரம்பிக்கனும் என்ற எண்ணமெல்லாம் இவனுக்கு தோன்றியது... ஆனால் இவ்வளவு சீக்கிரமெல்லாம் இவனால் பதிப்பகம் ஆரம்பித்திருக்க முடியாது...
இது எல்லாவற்றிற்கும் துஷ்யந்தோட உந்துதல் தான் காரணம்... இதெல்லாம் துஷ்யந்த் செய்வது கங்காவுக்காக தான் என்றாலும், இவன் மீதும் அவன் அக்கறை வைத்திருக்கிறான்...
கங்கா, துஷ்யந்த் இருவருமே ஒருவரையொருவர் நேசிக்கின்றனர்... ஆனால் இருவருமே அதை வெளிக்காட்டி கொண்டதில்லை... ஆனால் அதை புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு இவன் ஒன்றும் முட்டாளில்லை... கங்காவின் நேசத்தில் கூட சிறிதளவு சந்தேகம் பட முடியும்... ஆனால் துஷ்யந்திற்கு கங்கா மீது இருக்கும் நேசத்தை சந்தேகிக்கவே முடியாது... கங்காவிற்காக துஷ்யந்த் யோசித்து செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அதை இவன் கவனித்திருக்கிறான்.. இந்த திருமணத்துக்கு அவன் ஒத்துக் கொண்டதற்கு காரணமும் கங்காவின் பேச்சை மீற முடியாத காரணமாகத்தான் இருக்கும்...
ஆனால் அதற்காக இந்த திருமணம் நடக்க வேண்டுமா..?? கங்கா, துஷ்யந்த் இந்த இருவரை விட இந்த திருமணத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது துஷ்யந்தை திருமணம் செய்துக் கொள்ளப் போகும் அந்தப் பெண் அல்லவா..?? அவளுக்கு துஷ்யந்தின் மனதில் இடம் கிடைக்க போராட வேண்டியிருக்குமே..?? இதெல்லாம் இந்த கங்கா ஏன் யோசித்துப் பார்க்கவில்லை..?? என்று அந்த முகம் தெரியாத பெண்ணிற்காக இளங்கோ யோசித்தான்...
துஷ்யந்தை தவிர அவன் வீட்டில் உள்ள மற்ற நபர்களோடு இவனுக்கு அறிமுகம் இருந்ததில்லை... இந்த திருமணம் வெறும் பேச்சளவில் இருந்தாலாவது, ஏதாவது செய்யலாம்... இந்த திருமணம் முடிவான நிலையில் இப்போது என்ன செய்ய முடியும்.. துஷ்யந்தின் அன்னையைப் பற்றியும் யோசிக்க வேண்டுமே..? அப்படியென்றால் இந்த திருமணம் நடக்க தான் வேண்டுமா...? என்று இளங்கோ நினைக்க...
இந்த திருமணம் நடக்கவே கூடாதென்ற உறுதியான சிந்தனையோடு வேலையில் ஈடுபட்டிருந்தார் வாணி... ஆனால் அவருக்கும் இந்த திருமணத்தை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை..
கங்காவின் அன்புக் கட்டளையை மீற முடியாமல், இவரால் துஷ்யந்திடம் எதுவும் பேச முடியவில்லை... கோமதி அம்மாவிடம் ஏதாவது பேசலாம் என்றால், அவரிடம் என்ன காரணம் கூறுவது..?? அதிலும் இவர் கங்காவோடு இருப்பதால், கோமதி அம்மா கோபமாக உள்ளார்...
இளங்கோ ஊரிலிருந்து வந்தால் கங்காவிடம் பேச சொல்ல வேண்டும் என்று இவர் நினைத்துக் கொண்டு இருந்தார்.. ஆனால் இளங்கோவையும் பேச முடியாதபடி அவள் செய்துவிட்டாள்... இனி என்ன செய்ய முடியும்..??
இளங்கோவிற்கும், துஷ்யந்திற்கும் கங்கா என்ன சொல்லி வைத்திருக்கிறாளோ அது தான் தெரியும்... இவருக்கு மட்டுமே கங்காவிற்கு நடந்த அனைத்துமே தெரியும்... அப்படி எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் இவராலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை... பின் துஷ்யந்தோ... இல்லை இளங்கோவோ என்ன செய்ய முடியும்...
இந்த நேரத்தில் வாணி நம்புவது கடவுள் ஒருவரை மட்டும் தான்.. கடவுள் துஷ்யந்தோட பேருக்கு பக்கத்தில் கங்காவின் பேரை எழுதியிருந்தால்... கங்காவின் பேரை மட்டுமே எழுதியிருந்தால்... வேறு எந்த சக்தி செயல்பட்டாலும் இந்த திருமணம் நடக்காது...
ஆனால் கங்காவிற்கு கடவுளுடைய கருணை கிடைக்குமா..?? கங்காவுடைய இந்த ஆறு வருட துயரம் நீங்குமா..?? கண்டிப்பாக கங்காவிற்கு கடவுளின் அருள் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடு வாணி அந்த கடவுளிடம் இந்த திருமணம் நடக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
தடைப் படாத என் சுவாசத்திற்காக...
என் ஜீவன் காத்திருக்கிறது...!!
{kunena_discuss:1078}