“தம்பி, பாப்பாவுக்கு, உடம்பு சரியில்லையா, அம்மா கூட வரல போல..” - கனகா
இல்லை என்று அவன் தலையசைத்தான். தர்ஷினிக்கு புரிந்தது அவன் மணமானவன், இதற்கு மேல் என்ன யோசிப்பது? உடனே அங்கிருந்து அகல வேண்டுமென அவள் உள்ளம் துடித்தது. நிமிர்ந்து ஒருமுறை அவனைப்பார்த்தாள், அவள் கண்கள் கலங்கியது, உண்மையில் அவளை விட அந்த சந்திப்பில் அதிகம் வருந்தியவன் சிவாதான். அவன் ஏதும் பேசாது நின்ற நிலையே அவனைப்பற்றி உரைக்க,அங்கே நிற்கப்பிடிக்காது சற்று தள்ளிப்போய் நின்றாள் அவள்.
கனகா ஏதோ பேசிவிட்டு வந்தாள், அவளையும் சிறுமி ப்ரியாவையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டி பார்க்கிங்க் வரை வந்தவளின் மனம் ஒரு நிலையில் இல்லை. ஒரு பக்கம் அவன் தோள்பை, மற்றொரு பக்கம் மயங்கி சுருண்டு கிடந்த குழந்தை, அவனைப்பற்றி கேட்கவே வேண்டாம், வாடிய முகம் என மாறி மாறி அவனது நிலையே சிந்தனையில் விரிய, தன் கண்களை மூடி ஒருகணம் அமைதியானாள், தன் மனதிற்கு அவளே சொல்லிக்கொண்டாள், “தர்ஷினி, இதில அவர் மேல கோபப்பட என்னயிருக்கு?, அவருக்கு கல்யாணமாகி குழந்தையிருக்கு, நீ செஞ்ச கற்பனைக்கு அவர் என்ன செய்வார்? அவர் இருந்த நிலைமையில உங்கிட்ட இப்ப என்ன பேசமுடியும்”, கொஞ்சநேரம் அங்கேயே நின்றவள், மறுபடியும் மருத்துவமணைக்குள் நுழைந்தாள். எப்போதும் மற்றவருக்கு உதவும் அவளுடைய மனம், அவனை நிற்கதியாய் அங்கேயே விட்டு செல்ல அனுமதிக்கவில்லை. விறுவிறுவென உள்ளே நுழைந்தவள், அவன் நின்ற திசையைநோக்கி நடந்தாள்,
அவனருகே சென்று, “குழந்தைக்கு முடியலயா? என்ன ஆச்சு?” என்றாள்.
அவளுடைய குரலுக்கு திரும்பியவனின் முகத்தில் ஒரு நொடி மின்னல் வந்து போனது, அவன் வாயைத்திறக்கும்முன், விஷ்ணுவின் உடல் நடுங்க தொடங்க, அவளது நெற்றியில் கையை வைத்துப்பார்த்தாள் தர்ஷினி, உடம்பு கொதித்தது, அந்த நொடியில் அனைத்தையும் மறந்துபோனாள், அவன் தோளிலிருந்து விஷ்ணுவை தூக்கி தன் மார்போடு அனைத்துகொண்டாள். காய்ச்சலில் பிதற்றும் குழந்தையைத் தூக்கிகொண்டு அங்கு நின்ற கியூவைத்தாண்டி மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள்.
“மேம், கொஞ்சம் நில்லுங்க, உங்களுக்கு முன்னாடி இத்தனை பேர் நிக்குறாங்க, உங்க டோக்கன் நம்பர்? “ என்று வாசலில் அவளை மறித்த நர்சை தள்ளிக்கொண்டு உள்ளேபோனாள். அவள் கையிலிருந்தக் குழந்தையின் அவசர நிலையை உணர்ந்து மருத்துவர் உடனேயே விஷ்ணுவுக்கு சிகிச்சை செய்தார்.
சிவாவின் முகத்தையும், தர்ஷினியையும் பார்த்தவர்
“எத்தனை நாளா காய்ச்சல்?”
தர்ஷினி சிவாவின் முகத்தைப்பார்க்க, “இரண்டுநாள் டாக்டர்” என்றான் அவன்.
“உங்க பெயர்”
“சிவா”
மருத்துவர் தர்ஷினியைப்பார்த்து,
“மிசஸ்.சிவா, நான் இஞ்ஜெக்ஷன் போட்டிருக்கேன், காய்ச்சல் அதிகமானா ஃபிட்ஸ் வர சான்ஸ் இருக்கு, இவ்ளோ கேர்லெஸ்ஸா இருந்திருக்கீங்க! காய்ச்சலுக்கு ட்ராப்ஸ் எழுதிருக்கேன், கவனமா நேரம் தவராம கொடுங்க”
இருவரும் வெளியே வந்தனர். தர்ஷினியின் கைகளில் மென்மையாக கண்கள் மூடிக்கிடந்தாள் விஷ்ணு, சிவா மருந்துகள் வாங்கிவந்ததும், அவன் முகம் பார்த்து
“உங்க மிசஸ் வரலையா?” – தர்ஷினி
“இல்ல” – சிவா
தர்ஷினிக்கு வேதனையாக இருந்தது, என்ன பெண் அவள், தன் குழந்தைக்கு முடியாத தருணம் கூட அவள் அருகில் இருக்க முடியாது அப்படியென்ன வீட்டில் வெட்டி முறிக்கிறாளாம்?
“தர்ஷினி, வீடு வரைக்கு வர முடியுமா?” நான் தனியா தான் வந்தேன், இப்போ விஷ்ணு இருக்கிற நிலைமையில் அவளை தனியா கார்ல கூட்டிட்டுபோறது கஷ்டம்..”
அவன் முடிக்கும் முன், தன் கைகளில் மலராக கண்களை மூடிக்கிடந்த குழந்தையைப்பார்த்தாள், “விஷ்ணு தான் இவ பேரா?”
அவன் மனம் லேசாகிப்போனது, “ம்ம், விஷ்ணுப்பிரியா, வர்றீங்களா?”
“இல்ல சார், ஸாரி, இப்பவே லேட் ஆயிடுச்சு, நான் கனகா அக்காவ கூட வர சொல்றேன்!” – தர்ஷினி
அவனது முகத்தில் ஏமாற்றத்திற்கான அறிகுறியும், மெல்லிய கோபமும் எட்டிப்பார்த்தது. “இல்ல வேண்டாம், நானே பார்த்துகிறேன்” என்று அவன் நீட்டிய கைகளில் விஷ்ணுவைக் கொடுத்தாள்.
“தேங்க்ஸ் தர்ஷினி” – என்று அவன் சொல்லும்போது அவளுக்கு வேதனையாக இருந்தது, யாரோ ஒருவன் என அவளால் அவனை நினைக்கமுடியவில்லை. வண்டியைக்கிளப்பிக்கொண்டு போனாள், ஏமாற்றத்தில் கணத்திருந்த அவளது இதயம் கரைந்து கண்களில் வழிந்தது. வீட்டுக்குள் நுழையும்போது காவ்யாவும் மாணிக்கமும் வாசலில் அமர்ந்திருந்தனர். வீட்டுக்குள் வந்ததும், முகம் கழுவி இரவு உடைக்கு மாறினாள். மாணிக்கம் தன் அறைக்குள் புகுந்து உறங்கப்போய்விட்டார். இருவரும் மொட்டைமாடிக்கு வந்தனர். தர்ஷினியின் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று புரிந்துகொண்டாள் காவ்யா.
“என்னாச்சு டீ?” – காவ்யா