“அட, மண்டு அப்படியெல்லாம் இல்ல நீ வேணா பாரு, நீ இப்படி அரையும் குரையுமா கிளம்பினதுக்கே அவர் நொந்திருப்பாரு, சீக்கிரம் அவரே உன்ன தேடி வருவாரு பாரு, சொ டோன்ட் வொரி, எல்லாம் நல்லதாவே நடக்கும்!” – காவ்யா
“வருவாரா காவீ?” ஏக்கத்துடன் தர்ஷினி காவ்யாவின் முகத்தைப்பார்க்க
“வராட்டி, அடுத்த தடவ அவர் தலையிலேயே விடலை போட்டுறுவோம்!”
தர்ஷினி முறைக்க, “ஓகே, ஓகே! அதெல்லாம் வேண்டாம் ஏற்கனவே ஒரு தடவ தேங்காவால அடிச்சாச்சு! பாவம் உன்ன கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்தினா அப்ப அவருக்கு தெரியும் அந்த விடலையே பெட்டர்னு!” என்று காவ்யா சொல்ல இருவரும் புன்னகைத்தனர், “மச்சீ, ஹேப்பியா இரு, அட்வகேட் சார் நிச்சயம் வருவார், அவர் வரலன்னா என் பேர ‘யாவ்கா’ ன்னு மாத்திக்கிறேன் ஓகேவா!” - காவ்யா
தர்ஷினி புன்னகைத்துவிட்டு கிளம்பினாள், அவள் வீட்டிற்குள் நுழையும்போது மாணிக்கம் அவளுக்காவே காத்திருந்தார். “என்னம்மா, ஷாப்பிங்க்ளாம் முடிஞ்சுதா?”
“அமாம்பா!”
“எங்கம்மா ஒரு பேக்கையும் காணும்!”
அப்போதுதான் தர்ஷினி உணர்ந்தாள் எல்லாம் காவ்யாவின் காரிலேயே இருந்தது. “அதுவாப்பா, காவீ வேணும்ங்கிறத எடுத்துட்டு நாளைக்கு கொண்டு வருவாப்பா” அவர் அடுத்த கேள்வி கேட்கும்முன்னே அவள் விருட்டென்று உள்ளே சென்றாள். மாணிக்கம் மகளிடம் தெரிந்த மாற்றத்தை உணராமலில்லை. முகம் கழுவி, விளக்கேற்றி நெற்றியில் சிறிய திருநீருக் கீற்றுடன் வந்து நின்ற மகளின் முன்னே காஃபி கோப்பையை நீட்டினார் மாணிக்கம்.
“இரண்டுபேரும் காலையிலேயே போனீங்க, இப்பதான் வர்றீங்களா? எங்கல்லாம் போனீங்கம்மா?” மாணிக்கத்தின் இந்தக் கேள்வி பொதுவானதுதான் இதுவரை அவர் கேட்கும்முன்னே அவளே எல்லாவற்றையும் ஒப்புவித்துவிடுவது வழக்கம், இன்று வழக்கதுக்கு மாறாக, தர்ஷினி மாணிக்கத்திடம் மறைக்கத்துணிந்தவற்றை அவர் கேள்வியாக கேட்கிறார்,
“அப்பா, ஷாப்பிங்க் போனோம்! நாளைக்கு சம்பந்தம் அங்கிளுக்கும் ஆன்டிக்கும் மேரேஜ் அனிவர்சரி அதான் அப்பா லேட் ஆயிடுச்சு” மாணிக்கத்திடம் சிவாவைப்பற்றி சொல்லவா? வேண்டாமா? அவள் மனம் தடுமாறியது, அவள் மனதில் புதிதாக எட்டிப்பார்க்கும் கள்ளத்தனம் அவளை ஏதோ செய்ய, மீண்டும் தொடர்ந்தாள்
“அம்பத்தூர்ல சம்பந்தம் அங்கிளோட அட்வகேட் வீடு வரைக்கும் போயிருந்தோம்பா!” – தர்ஷினி
மாணிக்கம் நிமிர்ந்து மகளைப்பார்த்தார், ஏதும் அறியாதாவள் போல் தர்ஷினி தொடர்ந்தாள், “அங்கிள் காவ்யாகிட்ட அங்க போயிட்டு வர சொன்னாங்க, ஏதோ டாக்குமென்ட் விசயமா, அவங்களுக்கு நம்ம எல்லாத்தையும் நல்ல தெரிஞ்சிருக்குப்பா..” இப்போது தர்ஷினியிம் குரல் குறுகியது, அவளுக்கு நன்றாக தெரியும் மாணிக்கம் எவ்வளவு தூரம் கணிவானவரோ அவ்வளவு தூரம் கண்டிப்பானவரும் கூட!
“தர்ஷினி, செண்பகம் வீட்டுக்குப் போயிருந்தீயா, சிவாவ பாத்தீயா?” மாணிக்கத்தின் குரல் உயர்ந்தது, நேரில் கண்டதுபோல் கேட்கும் அவருக்கு எப்படி பொய் உரைப்பது, மேலும் சிவாவைப் பற்றிய நேரடி கேள்வியை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தர்ஷினியின் மனதில் ஏதோ தவறு செய்ததுபோல் பயம் எழுந்தது!
“ஆமாம்பா, அவங்க நம்ம ரிலேஷ்னு சொன்னாங்க, நான் வேரெதுவும் கேட்கல, சீக்கிரமா கிளம்பிட்டேன், ஆன அவரு பாவம்பா அவங்க மிஸஸ் தவறிட்டாங்கப்போல.. பாவம் சின்னக் குழந்தையோட..” – தர்ஷினி
“தர்ஷினி” அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே இடையே வெட்டும்விதம் மாணிக்கத்தின் குரல் உயர்ந்தது
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல, வாழ்கையில யாருக்குதான் கஷ்டமில்ல, அவங்க அவங்க கஷ்ட நஷ்டம் அவங்களோட, அவங்களுக்காக யோசிக்காத, இனிமே அங்கப்போகக்கூடது தர்ஷினி, அவங்க தேவையில்லாம பழைய கதைய இழுப்பாங்க!”
“அவங்க மென்மையானவங்களாதான் இருக்காங்கப்பா, நல்லப் பேசினாங்க!” – தர்ஷினி மெல்லிய குரலில் சொன்னாள்.
“உனக்கு அவங்களப்பத்தி தெரியாது, தர்ஷி, காவ்யா வீடு மாதிரி எல்லாரும் இருப்பாங்கன்னு நினைக்காத, பணக்காரங்களுக்குன்னு இன்னொரு முகம் இருக்கு, உன் வயசில அதெல்லாம் புரியாது, தேவையில்லாம அவங்க பழக்க வழக்கம் நமக்கெதுக்கு?” இதை சொல்லும்போது மாணிக்கத்தின் முகத்தில் உண்மையான கோபம் பிரதிபலித்தது, தர்ஷினிக்கு அச்சம் மேலிட, “சரிப்பா” என்றவாரே தன் அறைக்குள் சென்றுவிட்டாள். தாய்வீட்டு சொத்தபந்தங்களின் மீது தன் தந்தைக்கு இருந்த வெறுப்பை அவள் நன்கறிவாள், காவ்யாவிடம் தைரியமாக பகிர்ந்துகொண்ட அந்த உணர்வை தந்தையின் முன் சொல்லமுடியாது போனது அவளுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது, நிறைவேறாத நிகழ்வுகளின் மீது ஏன் தன் மனம் செல்கிறது என அவளுக்கு வேதனையாக இருந்தது. சிவா தன்னைபோல் ஒர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தனக்கு நெருங்கிய சொந்தமாக இல்லவிடில் அந்த உறவு எத்தகைய இனிப்பானதாக இருக்குமென அவளுக்கு அப்போது தோன்றியது. ஏதெதோ எண்ணங்கள் அழக்களிக்க, இனி சிவாவைக்காணக்கூடாதென அவள் உள்ளத்திற்கு கட்டளையிட்டாள். தடைகளை மீறுவதுதானேக் காதல், இளமையில் உள்ளத்தைக் கட்டிபோட தெரிந்தவர்கள் உலகத்தில் யாரும் கிடையாதென, பாவம் சிறியவளுக்கு புரியாது வருந்தினாள், இரவு மெல்ல நகர்ந்தது.