05. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்
நாம் வாழும் நகரத்தில் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் தவறுகள் பல நடக்கத்தான் செய்கிறது. நம்மில் பலர் சம்பவங்களை மட்டுமே காதில் வாங்கிக்கொண்டு, விலகி நடந்துவிடுகிறோம், பிரச்சனை நம் வீட்டு வாசல் தொடும் வரை, நாம் அதைப் பற்றி யோசிப்பதில்லை. ஒரு சிலர் துணிந்து வருவதை எதிர்கொண்டு, தன்னையும் ஆபத்துக்குள்ளாக்கிக்கொள்கிறோம், இதில் ரிஷி இரண்டாவது ரகம். தன் கையைப்பற்றி பதறி நின்ற பெண்ணை பார்த்து அவன் மனம் கரைந்தது, பாதி போதையிலும் மயக்கத்திலும், அவன் முன் நடந்து வந்த கும்பலை பார்த்தான். லேசான இடியுடன் மழைத் தூரத்தொடங்கியது. அவனுக்கு தெரிந்தமுகங்கள் தாம், அவனோடு குடித்து கும்மாளமிடும் கூட்டம் தான், தெரியாத சில முகங்களும் இருந்தது.. அவர்களை கூர்ந்து பார்த்துக்கொண்டே ரிஷி, “என்னங்கடா, குடிச்சமா, வால சுருட்டிட்டு வீட்டில படுத்தமான்னு இல்லாம, இதெல்லாம் என்ன?” அவனது பார்த்தைகள் குளறி பேசியது கண்டு அவனும் போதையில் இருக்கிறான் என்று அந்த பெண்ணுக்கு தோன்றியது. அவளுக்கு இன்னும் பயம் அதிகமாகியது. அவள் பற்றியிருந்தக் கரம் தானாக விலக்கிக்கொண்டது.
“டேய், சரியான நேரத்தில வந்தடா, எங்க இவ எங்க கையில இருந்து தாப்பிச்சுடுவாளோன்னு நினைச்சோம், என்னமா ஓடுறா, இப்ப மாட்டினல, ஆனா என்ன நாலு பங்குனு நினைச்சோம் இப்ப ஆறா ஆயிடுச்சு!” ஒருவன் பேசிக்கொண்டே ரிஷியின் அருகே பயந்து பதுங்கி நின்றவளை வெறித்துப் பார்த்துக்கொண்டே முன்னேறினான்..
அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டது, மெதுவாக அவளது மனம் தளர்ந்தது, ரிஷியும் அந்த கூட்டத்தில் ஒருவனோ என்ற சந்தேகம் மேலிட, அவள் திரும்பி ஓட எத்தனித்தாள், உருவிய அவள் கையை அரைநொடியில் இழுத்துப் பிடித்துக்கொண்டான் ரிஷி…
“கோபி!” என்று அவன் குரலுக்கு, ரிஷி நீட்டிய கைகளில், ஒரு நீள இரும்பு தடியை கோபி கையில் கொடுத்தான்!
“சீ.. இராத்திரில இப்படி நாய் மாறி அலையிறிங்களே வெக்கமா இல்ல, எவண்டா இவ மேல கையை வைப்பேனு சொன்னது எங்க முன்னாடி வா, கையை வை பாப்போம்” என்று அவன் உரும, ரிஷிக்கு பரிச்சயமான சிலர், “விடுறா மச்சான், இது அவனுங்களுக்குள்ள பிரச்சனை. நீ விலகிறு, தேவையில்லாம உனக்கு எதுக்கு வம்பு”
ரிஷியின் கோபத்தைக் அது இன்னும் கிளறியது, “நீ வாய மூடுறா, என்னங்கடா இது, இதுவரை குடி கும்மாளமன்னு இருந்தீங்க சரி, இப்ப நீங்க பன்றது எவ்வளவு மோசமான காரியம்னு தெரியுமா? எங்க வீட்டில உங்கள பத்தி சொல்லும்போது கூட, இவ்வளவு கேவலமா கீழ்தரமா இருப்பீங்கன்னு நான் நினைக்கல, சீ உங்க ப்ரண்ட்ஷிப்ப நினைச்சு வெக்கமா இருக்கு! ஒழுங்கா இந்த பொண்ணுக்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு ஓடிடுங்க, இல்ல ஈவு இரக்கம் பாக்காம ஒருத்தன் விடாம வெளுத்துறுவேன்!” அவனுடைய குரலிருந்த ஆக்ரோஷம் அனைவரையும் சிறிது அச்சுறுத்தியது. ரிஷி சொல்வதை செய்பவன் இதை அறிந்த, அவனது நண்பர்கள் சிலர் பின்னடைந்தனர். அதில் இருவர் மட்டும் அந்த பெண்ணை விடும் எண்ணத்தில் இல்லை என்பதுபோல் ரிஷியை நோக்கி முன்னேறினர்.
ரிஷி ஒரு அடி பின்னால் சென்று தன் காரி கதவுவினைத் திறந்து அந்த பெண்ணை உள்ளே அமரும் மாறு செய்கைக்காட்ட அவள் விரைந்து சென்று உள்ளே அமர்ந்து கொண்டாள், ரிஷி தன் காரின் முன்னால் இருந்தப் பையைத்துளாவி அதிலிருந்த சிறிய தோள்ப்பையை எடுக்க அது அவனது ரிவால்வர் என்ற உண்மை அறிந்த கூட்டம் பின்னடைந்து ஜீப்பில் ஏறிக்கொண்டது, இதை அறியாத இருவர் முன்னேற, ஒருவன் பாய்ந்து ரிஷியைத்தாக்க, மற்றொருவன் கோபியின்மீது பாய்ந்தான். ரிஷியின் கரத்திலுருந்த இரும்பு தடி இடியென கோபியைத்தாக்கியவனின் முட்டில் வீழ்ந்தது, அவன் நொண்டிக்கொண்டே ஓடி வந்து ரிஷியை நோக்கிவரும்போது அவன் தன் கையிலிருந்த ரிவால்வரால் கீழே இரண்டுமுறை சுட, அவ்வளவு தான் தங்கள் உயிரைக்காக்கும் பொருட்டு வேட்டைநாய்களென பாய்ந்து ஜீப்பில் ஏறிக்கொண்டனர். அவர்கள் கண்ணிலிருந்து மறைந்த சில நிமிடங்களில், ரிஷி, “கோபி, உன்னக்கொண்ணுமில்லையே?” என்றான்
“நீங்க இருக்குப்போது எனக்கேதும் ஆகாது சார்” – கோபி
“சாரி கோபி, நீ சொன்னது ரொம்ப சரி , இவனுங்க இவ்வளவு மோசமா பிகேவ் பன்னுவானிங்கன்னு நான் நினைக்கல!” இருவரும் பேசிக்கொண்டே காரில் ஏறினர், ரிஷியின் கண்களில் மழையில் நனைந்து பதுங்கி நிற்கும் கோழி குஞ்சினைப்போன்று தோன்றியது காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் உருவம்.
“உங்க வீடு எங்கன்னு சொல்லுங்க, நாங்க உங்களைப் பத்திரமா இறக்கிவிட்டுட்டு போறோம்” – ரிஷி
அவள் பயந்தவளாய், “சார், நான் பக்கத்தில இருக்கிற ஹாஸ்ப்பிட்டல தான் வொர்க் பன்றேன் என்ன அங்கேயே இறக்கிவிட்ருங்க”
கோபியும் ரிஷியும் ஒருத்தரை ஒருத்தர்பார்த்துக்கொண்டனர்.
“நீங்க எப்படி மேம் இந்த கூட்டத்துக்கிட்ட மாட்டினீங்க, நீங்களும் பப்புக்கு வந்தீங்களா?” – கொபி
கோபியின் இந்தக் கேள்விக்கு அதிர்ந்து நிமிர்ந்த அந்தப் பெண்ணை ரிஷியும் ஒரு நிமிடம் திரும்பிப்பார்த்தான், மென்மையான அழகுடன், கலைந்த கூந்தலும் அழுது சிவந்த கண்களும், மழைச்சாரலில் நனைந்து கன்னத்தில் ஒட்டியிருந்த கூந்தலுமாய் அவளோரு தேவதயாய் தான் இருந்தாள். இவ்வளவு அழகுடன் நிறைந்த, இளமையும் இந்த இரவு நேரத்தில் தனித்து வந்தால் நிச்சயம் அது ஆபத்தை விளைவிக்கும் என அவனுக்கு தோன்றியது.