"என்ன?"-அந்த அம்மா அர்ஜூனின் தாய் என்று எண்ணியவள்,மேற்கொண்டு வினாக்களை தொடுக்கவில்லை.
"உ..உன்னோட ஜாதகம்!"
"ஜாதகமா?"
"ம்...எனக்கு ஜாதகம் பார்க்க போறாங்க!கூடவே உன்னுடைய ஜாதகத்தையும் பார்க்க ஆசைப்படுறாங்க!"
"............."
"உன் கல்யாண விஷயமா இருக்கலாம்!"
".............."
"உனக்கு அதில் நம்பிக்கை இல்லை தான்!அட்லீஸ்ட் சும்மா அவங்க மன ஆறுதலுக்காக பார்க்கட்டுமே!"-அவள் சில நொடிகள் மௌனம் சாதித்தாள்.
"மேலே முதல் ரூம்ல இருக்கிற பீரோவுல இருக்குப் பார்!"
"வந்து எடுத்துக் கொடேன்!"
"நான் அங்கே போக மாட்டேன்!"
-அது மகேந்திரனும்,காயத்ரியும் வாழ்ந்த அறை ஆதலால் விளைந்த தயக்கம் இது!
"சரி...நானே எடுத்துக்கிறேன்!"-என்றவன் வேகமாக விரைந்தான்.
தூய்மையாக இருந்த அந்த அறையில் இருந்த அலமாரியில் தேடினான்.அதில்,பல வஸ்திரங்களுக்கு இடையே இருந்தது மாயாவின் ஜாதகம்!!
"எதுக்காக கேட்டிருப்பாங்க தெரியலையே!"-என்ற குழப்பத்தோடு கதவை மூடியவன்,கீழிறங்கி வந்தான்.
"மாயா!"
"மாயாம்மா ஆபிஸ் கிளம்பிட்டாங்க!"-பதிலளித்தாள் தேவசேனா.
"ஓ...சரிம்மா!நான் வரேன்!"-விடைப்பெற்று விரைந்தான் அவன்.
அவன் கூறிய இடத்தில் பதற்றமாக காத்திருந்தார் காயத்ரி.அதிகாலையில் கண்ட சொப்பனம் குறித்த எண்ணங்களே இதயத்தை முழுதுமாக வியாபித்திருந்தன.
மாயாவின் அக்கோலம் குறித்து எண்ணும் போதெல்லாம் மனம் பதைத்தது!!!
"மா!"-என்றப்படி அவர் எதிரேஅமர்ந்தான் அர்ஜூன்.
"அர்ஜூன் மாயாவை பார்த்தியா கண்ணா?நல்லா இருக்காளா?"
"என்னாச்சும்மா?ஏன் தேவையில்லாம பயப்படுறீங்க?"
"இல்லை கண்ணா!ஏதோ தப்பு நடக்கப் போறா மாதிரி இருக்கு!"
"அதெல்லாம் எதுவும் நடக்காது!மாயா யார் எதிர்த்து நின்றாலும் அழிக்கிற வல்லமை படைத்தவள்!அவளா உருவாக்காம அவளுக்கு கெடுதல் நிகழவே நிகழாது!"-என்றப்படி அவளது ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தான் அர்ஜூன்.
"நீங்க கேட்டது!"
"ரொம்ப தேங்க்ஸ் கண்ணா!"
"இருக்கட்டும்மா!அப்பறம் மாயா ஜாதகத்தை பார்க்கவும் பார்க்கிறீங்க!அப்படியே கல்யாணம் எப்போ நடக்கும்னு கேட்டு வாங்க!"
"ஏன்?"-ஆர்வமாக கேட்டார் காயத்ரி.
"ஆ...!அப்பறமா சொல்றேன்!"
"சரி கண்ணா!நான் வைத்தீஸ்வரன் கோவில் போறேன்!மாயாவுக்கு இந்த விஷயம்..."
"தெரிய வராது!"-வாக்களித்தான் அவன்.
வைத்தீஸ்வரன் கோவில்...
நீண்ட நேரமாய் மாயாவின் ஜாதகத்தை படித்தார் எதிர் அமர்ந்திருந்த முதியவர்.அவர் முகத்தில் ஆயிரமாயிரம் அதிர்ச்சி ரேகைகள்!!சில சோழிகளை எடுத்து உருட்டிப் பார்த்தார்!!சுவடிகளைப் படித்துப் பார்த்தார்.அவர் முகத்தின் திகைப்பு பல்கி கொண்டே சென்றது!அவரை காணும் மாத்திரத்தில் திக்கென்று இருந்தது காயத்ரிக்கு!"
"இந்த பொண்ணு உங்களுக்கு யாரு?"
"என் மகள் தான்!"
"இவ அப்பா பெயர் ஈசனோட பெயரில் ஒன்றாக இருக்கும்!"
"ஆமா சாமி!"
"யாருக்கும் ஆட்படாத தன்மையுடையவர்!சூழ்ச்சியால மரணிக்கப்பட்டார் உண்மையா?"
"ஆமா!அது கவனக்குறைவால நிகழ்ந்த..."
"இல்லை!"-உரக்க கூறினார் அவர்.
"அது கவனக்குறைவு இல்லை.அது சூழ்ச்சி!"-திடுக்கிட்டு போனார் காயத்ரி.
"தீவிரமான சிவ பக்தன்!அனுக்ஷனமும் இறைவனை மனதில் வைத்து வணங்கிவர் இல்லையா?"
"ஆமா!"
"அவருக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் வழங்க படைக்கப்பட்டவள் தான் இந்த ஸ்திரி!"-காயத்ரியின் சப்த நாடியும் ஒடுங்கியது.