"யாரு?"-அவன் சில நொடிகள் மௌனம் சாதித்தான்.பின்,மெல்ல எழுந்தவன் அங்கிருந்த அலமாரிகளில் எதையோ தேடினான்.
"ருத்ரா இந்த ரூம் உள்ளே இதுநாள் வரை என்னை தவிர யாரையும் அனுமதித்து இல்லை!முதல்முறையா இந்த அறையை உன்னோட பகிர்ந்துக்க விரும்பி இருக்கான்.மறைமுகமா,அவனுடை நினைவுகளையும் சேர்த்து பகிர விரும்பி இருக்கான் போல!"-என்று ஒரு ஆல்பத்தை எடுத்து வந்தான்.
"இதுநாள் வரை அவன் மனசுல யாரும் நுழைய முடியாததன் காரணம்,இந்தப் பொண்ணு தான்!"-என்று ஒரு பெண்ணின் புகைப்படத்தினை காண்பித்தான்.
ருத்ராவின் கழுத்தில் பின்பக்கமாய் இருந்து தன்னிரு கரங்களையும் மாலையாக்கி,அழகிய வெண் பற்கள் யாவும் தெரியும்படி நகைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
"கங்கா!"-தமிழகத்தின் கலாச்சார மணம் அவள் எழில் முகத்தில் வீசி கொண்டிருந்தது.மித்ரா அந்த ஆல்பத்தை வாங்கி பார்த்தாள்.
"இவ இப்போ உயிரோட இல்லை!"-மாயா அதிர்ந்துப் போனாள்.
"இவங்க காதல் உண்மையிலே ரொம்ப அழகானது மாயா!ரொம்ப அழகானது!காதல் மேலே வெறுப்பை கொட்டுற தானே!இவங்க கதையை கேட்டா,உனக்கே காதலிக்கணும்னு எண்ணம் வரும்!"
".............."
7 ஆண்டுகளுக்கு முன்...
கங்கைகொண்டான்புரம்!!
"அப்பறம் தம்பி பள்ளிக்கூடம் படித்து முடித்துட்டீங்களா?"-காரை ஓட்டியப்படி கேட்டார் ஓட்டுனர்.
"பள்ளிக்கூடமா?அண்ணே..!காலேஜ் முடித்துட்டு வரேன் நான்!"
"ஓ...பெரிய பள்ளிக்கூடமா?அதை தான் படித்து முடித்துட்டீங்களா?"
"முடித்துட்டேன்!சரி..பாட்டி,மித்ரா எல்லா எப்படி இருக்காங்க?"
"பாட்டிம்மாக்கு உங்க நினைப்பு தான்!எப்போ பார்த்தாலும் உங்களைப் பற்றி தான் பேசுவாங்க!"
"உடம்பு எல்லாம் பரவாயில்லையா?"
"ம்...பரவாயில்லை தம்பி!பாட்டிம்மாவை நல்லப்படியா பார்த்துக்கிறாங்க!"
"நம்ம மித்ரா அவ்வளவு பொறுப்பு கிடையாதே!"
"மித்ராம்மாவை விட கங்கா தான் பாட்டியை நல்லா பார்த்துக்கிறா!"
"கங்காவா?யாரது?"
"ஓ...உங்களுக்கு கங்காவை தெரியாதா?பாவம் தம்பி...!நம்ம தோட்டக்காரர் சுப்பையா இல்லை!"
"ஆமா..!"
"அவருடைய பேத்தி தான்!நல்ல மனுஷன் இறந்துட்ட அப்பறம்,பாட்டிம்மா தான் அவள நம்ம வீட்டிலே தங்க வைத்திருக்காங்க!சும்மா சொல்ல கூடாது தம்பி!பொண்ணு தங்கம் மாதிரி!அடக்கமான பொண்ணு!மித்ராம்மா பள்ளிக்கூடத்துக்கு போயிட்டா!"
"அது காலேஜ்!"
"ஆங்...அதுக்கு போயிட்ட அப்பறம் பாட்டிம்ம தனியா ரொம்ப கஷ்டப்படுவாங்க!கங்கா வந்ததில் இருந்து அவங்களுக்கு கவலையே இல்லை.நம்ம பெரிய வைத்தியர் இல்லை..!"
"டாக்டரா?"
"ஆ..அவர் தான்!அவர்கூட உடல்நிலையில நல்ல முன்னேற்றம்னு சொல்லிருக்கார்!"
"ஓ...!"
"ரொம்ப புத்திசாலிப் பொண்ணு தம்பி!எதையும் சட்டென புரிந்துப்பா!நீங்க பழகி பாருங்க உங்களுக்கே பிடிக்கும்!"-அவன் மனதில்ஆழமாய் பதிந்தன அவள் குறித்த எண்ணங்கள்!!
கங்காவினை குறித்த எண்ணங்கள் அவன் மனம் முழுதும் நிறைய ஆரம்பித்தன...!
அன்று ஒருநாள்..!
தனது புகைப்படமெடுக்கும் கருவியை எடுத்துக்கொண்டு அக்கிராமத்தின் இயற்கை எழிலை படமெடுத்து கொண்டிருந்தான் ருத்ரா.சுற்றி மாமரங்கள் சூழ்ந்த தோப்புகள்!சூரியனும் உள்ளே நுழைய இயலாமல் விருட்சங்கள் அரணாய் நின்று நிலமகளை காவல் காத்திருந்தன.அத்தாய் பூமியில் ஊற்றெடுத்திருந்த பெரிய குளம்!!இயற்கையின் ரசனையில் தன்னை தொலைத்திருந்தான் ருத்ரா!!இயற்கையின் அழகில் தொலைந்தவன் எதைக்குறித்தும் சிந்திக்காமல் பின்னால் நகர,அவனது கால்கள் அங்கிருந்த பாசியில் பதிய,என் மீதா காலை வைத்தாய் என்று பழி வாங்க,அவனை அது தள்ளிவிட,கால் இடறியவன்,அப்பக்கமாய் ஒன்றும் அறியாமல் சென்ற கன்னிகையின் மேல் விழ,முடிவாய் இருவரையும் அக்குளம் தாங்கிப்பிடித்தது.ஓரிரு நொடிகள் இருவரும் வெளியே வரவில்லை.பின்,போராடி வெளியே வந்தான் ருத்ரா!!அப்போது தான் அவளது முகத்தை முதல்முறையாக பார்த்தான்.மண் வாசனை வீசும் கலாச்சார பண்பாடு அழியாமல்,நீண்ட நெடிய கேசத்தினை தழைய பின்னி,விழிகளில் கருமை தீட்டி,விழிகளுக்குள் அச்சத்தினை விளைவித்து அதே பார்வையால் தாக்கினாள் அவள்.