அவனின் அந்த பதிலில், கவலை கொண்டவள், மௌனமாக அனைத்தையும் ஒரு முறை திறந்து பார்த்துவிட்டு மூடி வைத்தாள்… அவனுக்காக பார்த்து பார்த்து சமைத்ததை எண்ணியவள், என் கூட பேச பிடிக்காத மாதிரி உன்னை சாப்பிடவும் அவருக்கு பிடிக்கலை போல… ஹ்ம்ம்… பரவாயில்லை… அவர் வெளியே சாப்பிடாம வந்திருந்தா கண்டிப்பா சாப்பிட்டிருப்பார் தான?... என்றெண்ணியவளுக்கு உடனேயே முகத்தில் புன்னகை வர, அவளின் மனசாட்சி, “எல்லாம் சரிதான்… அம்மா சாப்பிட்டாங்களான்னு கேட்ட மனுஷனுக்கு நீ சாப்பிட்டியான்னு ஏன் கேட்க தோணலை?...” என கேள்வி எழுப்ப, “அவரே பாவம் ஆஃபீஸிலிருந்து டயர்டா வந்திருப்பார்… இப்போ சாப்பிட்டியான்னு கேட்காட்ட நான் என்ன செத்தா போயிடுவேன்?...” என அவளும் சட்டென்று பதில் சொல்ல, “செத்து போக மாட்ட, ஆனா பட்டினி கிடப்ப…” என அவளின் மனம் சொல்லிவிட்டு சிரிக்க, அது சொன்ன பதிலில் அமைதியானவள், “என் புருஷனுக்காக நான் பட்டினி கிடக்குறது எனக்கு சந்தோஷம் தான்… நீ போய் உன் வேலையைப் பாரு…” என அவள் திட்டவும், அவளின் மனமோ சரிதான் போடி என மறைந்தது…
அடுத்த நாளும் இதே தொடர, சாரதா அதனை கண்டுபிடித்து, ரிஷி வந்ததும் சாப்பிட அழைக்க, அவன் வெளியே சாப்பிட்டுவிட்டு வந்ததாக சொல்லியதும், சாரதாவிற்கு கோபம் தலைக்கேறியது… “நீ வெளியே சாப்பிட்டு வந்திடுவ சரி… ஆனா இங்க உனக்காக சாப்பிடாம இருக்குறாளே ஒருத்தி அவளுக்கு என்ன பதில் இருக்கு உங்கிட்ட?... என கேட்க, சஷி அமைதியாக இருந்தாள்… அவனோ அவள் சாப்பிடாமல் இருப்பாள் என எண்ணவில்லை… “சாரிம்மா… நான்…” என அவன் இழுக்க, “அவ உனக்கு பொண்டாட்டி அது உனக்கு நினைவிருக்கா?... இல்லையா?... வெளியே தான் சாப்பிடுவேன்னா அப்புறம் வீட்டுல அவ எதுக்கு சமைச்சு வைக்குறா?.. ஆக்கி வச்சத தூர கொட்டுறதுக்கா?... இல்ல தெரியாமத்தான் கேட்குறேன்… அப்படி உன்னால சாப்பிடமுடியாதுன்னா ஒரு போன் பண்ணி சொல்ல முடியாதா முன் கூட்டியே?... அதுக்கு கூட நேரமில்லையா உனக்கு?...” என அவர் ரிஷியை வசை பாட,
அதுபொறுக்காத சஷியோ, “அத்தை… அவர் எங்கிட்ட போன் பண்ணி சொன்னார்… நான் தான் உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்…” என அவள் தன் மீது பழியை போட்டு கொண்டு தரையை பார்க்க, சாரதாவின் பார்வையோ, “பார்… உன்னைக் காப்பாற்ற அவள் போராடுவதை…” என மகனின் மீது நிலைக்க, அவனோ சற்று நேரம் யோசித்துவிட்டு, “சாரிம்மா… இனி இதுபோல நடக்காது… மன்னிச்சிடுங்க…” என தாயிடம் சொல்லிவிட்டு, “நீயும் என்னை மன்னிச்சிடு…” என சொல்ல, அவள், அவன் மன்னிப்பு கேட்பது பொறுக்காது, “இல்ல…” என முனக, சாரதா அதனை கவனித்து, இப்படி ஒரு மனைவி கிடைத்தும் வாழத்தெரியவில்லையே என் பிள்ளைக்கு… கடவுளே… நீ தான் இவர்களை சேர்த்து வைக்கணும்… என வேண்டிக்கொண்டே அங்கிருந்து அகன்றார்…
அவர் சென்றதும் அவள் வேகமாக, “நான்… நான் அத்தைகிட்ட எதுவும் சொல்லலை…” என திக்கித் திணற, அவனோ அவளிடம் “தெரியும்…” என்றான்… “என்ன?...” என கேள்வியுடன் அவனை நிமிர்ந்து பார்த்த போது, அவன் “சாப்பிட்டியா?...” எனக் கேட்க, அவள் பதில் சொல்லவில்லை… கிச்சனுக்குள் சென்று கையில் அவள் சமைத்ததை எடுத்து வந்தவன், டேபிளின் மீது வைத்துவிட்டு, “சாப்பிடு…” என சொல்ல, அவள் நடப்பது கனவா நனவா என முழித்தாள்… “நான் இனி வெளியே சாப்பிட மாட்டேன்… சரியா?... ஆனா எதோ ஒரு சந்தர்ப்பத்துல வெளியே சாப்பிட வேண்டியதாச்சுன்னா, வீட்டுக்கு தகவல் சொல்லிடுறேன்… நீ இப்படி சாப்பிடாம இருக்குறது இதுவே கடைசியா இருக்கட்டும்… என்ன புரிஞ்சதா?...” என அவன் கேட்க, அவள் தலை தானாகவே அசைந்தது…
சில நாட்களுக்குப் பிறகு, ரிஷி யாருடனோ போனில் சற்றே சிரித்து பேசிக்கொண்டிருக்க, தூரத்தில் நின்றவாறு அதனை கண் கொட்டாமல் பார்த்தாள் சஷி… வந்து இத்தனை நாட்களில் அவன் சிரிப்பதையே இன்று தான் காண்கிறாள்… எதுவோ அதிசயத்தைப் பார்ப்பது போல் சிலையென சமைந்து போய் அவள் பார்த்தாள் அவனை… தற்செயலாக அவன் எதுவோ உறுத்த திரும்பியவனின் பார்வையில் இருந்து சட்டென விலகி நின்று சிரித்தாள் அவள்… அணுஅணுவாக அவனை ஒவ்வொரு வினாடியிலும் ரசித்தாள்… அவனது ஒவ்வொரு செயலிலும் லயித்தாள்…
அந்த வாரத்தில் ஒருநாள், சாரதா ரிஷியிடம், சஷியோடு எங்காவது வெளியே சென்றுவிட்டு வா என கூற, அவனோ தயங்கினான்… அவனது தயக்கம் சாரதாவை எரிச்சல் படுத்த, அதை அவனிடமே அவர் தெரியப்படுத்தினார்… காரில் சின்ன பிரச்சினை இருப்பதாகவும், அது சற்று நேரத்தில் சரி செய்து வந்துவிடும், அதன் பிறகு அவளை அழைத்து செல்வதாக அவன் கூற, கார் இல்லை என்றால் என்ன பைக் இருக்கிறதல்லவா, அதில் அழைத்துசெல் என சாரதாவும் பிடிவாதம் பிடிக்க, அந்நேரம் அவனுக்கு ஆதரவாய் நேரத்தை தாமதப்படுத்தி, கார் வரும் வரை இல்லாத வேலை எல்லாம் இழுத்து போட்டு செய்து கை கொடுத்து உதவினாள் அவனின் அருமை மனைவி… கார் வந்ததும், அவளிடம் எங்கே செல்ல என கேட்டவனிடத்தில், கோவிலுக்கு போகலாம் என பதிலுரைத்தாள்… பயணம் செய்த அந்த சில மணி நேரத்தில் ஒரு வினாடி கூட அவன் அவளிடத்தில் பேசவில்லை… அவளும் பேச முயற்சிக்கவில்லை… ஆனால், ஓரப்பார்வையில் அவனை அளந்து கொண்டு வந்தவள், சாமி கும்பிட்ட நேரம் தவிர, பார்வையை அவனிடத்தில் இருந்து விலக்கவே இல்லை சிறிதும்… ஒவ்வொரு மணித்துளியிலும் அவனை மனதினுள் நிறைத்தாள் அளவே இல்லாது… சோம்பலே படாது…
அவன் திரும்பி கூட பார்க்காத பொழுதுகள், தேவைப்படுவதற்கு மட்டும் பேசின வார்த்தைகளை வைத்தே ஒருவருடத்தை முழுதாக கழித்தவளுக்கு அப்போது கூட அவன் மேல் சற்றும் கோபம் வரவில்லை… நாளுக்கு நாள் அவன் மேல் அவள் கொண்ட காதல் பெருகிக்கொண்டு தான் போனதே தவிர, ஒருநாளும் குறைந்ததில்லை… அவர்களின் திருமண நாளை கூட அவன் மறந்துவிட, உள்ளே வலித்த போதிலும் அதை அவள் முகத்தில் வெளிக்காட்டாது அவனிடம் புன்னகைத்து அவனின் ஒரு சில வார்த்தைகளுக்காக ஏங்கினாள்… சாரதாவிற்கு ரிஷி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வர, அதை கடவுளே அரங்கேற்றினார் இனிதாக மூன்று மாதங்களுக்குப் பிறகு…