“முட்டாள் தனமா பேசாத… அவங்க உன்னைப் பெத்தவங்க… அவங்க எதுக்கு உன்னையும் என்னையும் பயமுறுத்தணும்?... என்னை கல்யாணம் பண்ணினா நீ சந்தோஷமா இருக்க மாட்டேன்னு அவங்க நினைக்குறாங்க… பெத்தவங்க என்னைக்கும் பிள்ளைங்களோட நல்லதை தான் நினைப்பாங்க… அதை நீ கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்கப்பாரு…” என்றவனிடத்தில், “எல்லாம் புரிஞ்சி தான் சொல்லுறேன்… யாரை கல்யாணம் பண்ணினா நான் சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு தெரியும்… அதை தீர்மானிக்க அவங்க யாரு?...” என்றாள் அவளும் பட்டென…
“யாரா?... அவங்க உன்னை இத்தனை நாள் வளர்த்தவங்க… இப்போ நீ என் முன்னாடி நின்னு பேசிட்டிருக்கேன்னா அதுக்கு காரணம் அவங்க… அதை என்னைக்கும் வாழ்க்கையில மறக்காத… அவங்க பேச்சை மீறி கல்யாணம் பண்ணினா நாளைக்கு எதாவது பிரச்சினை வரும்போது அவங்க துணை நமக்கு இருக்காது… இன்னைக்கு காதல் தான் பெருசுன்னு தோணும்… ஆனா வாழும்போது தான் நாம இழந்த உறவுகளோட அருமை புரியும்…” என அவன் கூறியதும், “காதலிச்சு கல்யாணம் பண்ணுற வாழ்க்கையில நமக்குள்ள என்ன பிரச்சினை வரப்போகுது?... நடக்காததை எல்லாம் சொல்லி நீ எதுக்காக இப்போ நமக்குள்ள பிரச்சினை பண்ணிட்டிருக்குற?...” என அவள் ஆதங்கத்தில் பேச,
“நான் பிரச்சினை பண்ணலை… நீ தான் நான் சொல்லுறதை புரிஞ்சிக்க மாட்டேன்னு பிரச்சினை பண்ணுற… சே… இப்பவே இப்படி… நாளைக்கு கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் எப்படி எல்லாம் இருப்பியோ… தெரியலை…” என அவன் கோபத்தை முகத்தில் காட்ட, அவள் விழிகள் சிவந்தது… “பிரச்சினை என் அப்பான்னு தான் நினைச்சேன்…. ஆனா இப்பதான் புரியுது… உனக்கு என்னை காதலிக்க முடிஞ்சது… ஆனா கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா அப்பாவை காரணம் காட்டி இல்லாததை எல்லாம் சொல்லி என்னை அவாய்ட் பண்ணுற… சே… நீ இப்படி பட்டவனா?...” என அவள் வெறுப்பை வெளிப்படுத்த,
“உனக்கு எல்லாம் என்ன சொன்னாலும் புரியாது… நீ எப்படி வேணாலும் நினைச்சிக்கோ… நீ நினைக்குறதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது…” என சொல்லிவிட்டு அவன் திரும்பி நிற்க, “உனக்காக நான் வீட்டை விட்டு வரகூட தயாரா இருந்தேன்… ஆனா நீ என்னையும் தூக்கி எறிஞ்சிட்ட… என் காதலையும் தூக்கி எறிஞ்சிட்ட… ஆனா என் காதலை ஒரு நாள் இல்ல ஒருநாள் நீ நிச்சயம் புரிஞ்சிப்ப… அப்போ நிச்சயமா நான் உன் கைக்கெட்டும் தூரத்துல இருக்கமாட்டேன்… உன்னை நேசிச்சவளாகவும் இருக்கமாட்டேன்…” என அழுதுகொண்டே அவள் சொல்ல, அவன் அமைதியாக நின்றான்…
அவள் நின்று நின்று பார்த்தாள்… அவன் எதாவது பதில் பேசிட மாட்டானா?... நான் இப்போ பேசினதெல்லாம் மறந்துடு என ஓர் வார்த்தை சொல்லிட மாட்டானா என ஏங்கி நின்றாள்… அவனுக்கும் வாய் வரைக்கும் வார்த்தை வந்தது தான்… அவளின் விசும்பல் கேட்டு எங்கே அதை சொல்லிட நேர்ந்திடுமோ என தன்னையே கட்டுப்படுத்திக்கொள்ள அவன் முயற்சித்த போது, தன்னிடம் கைகூப்பி நின்ற அவளது தந்தையின் முகம் கண் முன் வர, மனதை கல்லாக்கிக்கொண்டு திரும்பியவன், “சொல்லிட்டல்ல… கிளம்பு…” என வார்த்தையிலும், “இன்னும் ஏன் இங்கு நிற்கிறாய்?...” என பார்வையிலும் சொல்ல, அவள் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை… அவள் அழுது அவன் பார்த்ததே இல்லை…. அப்படி சொல்வதை விட, அவளை அழ வைத்ததே இல்லை அவன்… ஏங்கி ஏங்கி அவள் அழுதும் நின்று அதை வேடிக்கைப் பார்க்க நேர்ந்த அவனின் கொடூர மனதை அவனே வெறுத்தான்…
தன்னால் தான் விருப்பமே இல்லாமல் அவள் மனம் நொந்து வேறு ஒருவனை திருமணம் செய்ய நேர்ந்ததாகவும், காலம் முழுவதும் இந்த குற்ற உணர்ச்சி தன் மனதில் நீங்காமல் நிறைந்து தன்னை வற்புறுத்தும் தண்டனை தனக்கு தேவைதான் எனவும் அவன் சாரதாவிடம் கூற, மகனை எப்படி அதிலிருந்து வெளிகொண்டுவருவது என அவர் யோச்சித்தார்… அதன் பின்னர் தான் பரிக்ஷித்-சஷிதாம்ருதா திருமணம் நடந்ததென்றும் சாரதா சொல்ல, ஒரு பிரளயத்தில் ஆட்பட்ட உணர்வுடன் இருந்தாள் சஷிதா…
மருமகளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, அவளை தொட்டு அவர் அழைக்க, “எங்கிட்ட இதை ஏன் அத்தை முதலிலேயே சொல்லலை?... சொல்லியிருந்தா நான் அவரோட குற்ற உணர்ச்சி இல்லாம வாழுறதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்திருப்பேனே…” என சஷி வலியோடு சொல்ல, சாரதாவோ சஷியை அணைத்துக்கொண்டார்… மனதில் பூட்டி வைத்த பாரத்தை இன்று அவளிடம் சொன்னதில் சற்றே நிம்மதி அடைந்தவர் அங்கிருந்து கிளம்ப தயாரானபோது அவரின் பார்வை அப்படியே நிலைகுத்தி நின்றது ஓரிடத்தில்… ஒரு பெண் கையில் தனது பச்சிளங்குழந்தையை வைத்து கொஞ்சி கொண்டிருக்க, அந்த இருவரின் மேல் நின்ற சாரதாவின் பார்வையை கவனித்து அவர்கள் யார் என கேட்க, அவள் தான் ரித்திகா என்றதும் தூக்கிவாரிப்போட நிமிர்ந்தவள் ஒருமுடிவோடு அவளை நெருங்கினாள் சாரதா தடுத்தும்…
“நான் சஷிதாம்ருதா… பரிக்ஷித் மனைவி…” என அவள் ரித்திகாவிடம் அறிமுகப்படுத்தி கொள்ள, ரித்திகாவின் முகமோ வெறுப்பை கக்கியது… சட்டென எழுந்த ரித்திகா, “ஏதேதோ காரணம் சொல்லி என்னை விலக்கினான்… நீ அவன் மனைவின்னு சொல்லுற, எதுக்கும் பார்த்து இரு உன்னையும் வெட்டி விட்டு போனாலும் போயிடுவான்… ஆனாலும் அவன் என்னை விட்டு போனது ஒருவகையில் நல்லது தான்… அவனோட உண்மையான குணமும் முகமும் எனக்கு தெரிய வந்துடுச்சே…. நான் அனுபவிச்ச வலிக்கும் வேதனைக்கும் கடவுள் என்னைப் புரிஞ்சிகிட்ட புருஷனை கொடுத்தார்… இதோ எங்க காதல் வாழ்க்கைக்கு சாட்சியா இந்த குழந்தையும்… ஆனா என்னை ஏமாத்தின பாவத்துக்கு அவன் கண்டிப்பா நரக…” என சொல்லி முடிப்பதற்குள்,