“தயவுசெய்து சாபம் கொடுத்துடாதீங்க உங்களை கெஞ்சி கேட்குறேன்… இப்போ வர அவர் அந்த நரக வேதனை தான் அனுபவிச்சிட்டு இருக்குறார்… உங்களை வேணும்னே அவர் பிரியலை… சந்தர்ப்பமும் விதியும் பிரிச்சிடுச்சு… அதுல அவர் மேல எந்த தப்பும் இல்லை…” என சஷிதா சொல்வதை நம்பாத தன்மையுடன் பார்த்த ரித்திகாவிடம், நடந்த நிகழ்வுகளை அவள் சொல்ல, தன் தவறை உணர்ந்தாள் ரித்திகா… தன் தந்தை செய்த செயலுக்குத் தான் மன்னிப்பு கேட்பதாக கூறியவளுக்கு அழுகை தன்னை மீறி வர, “உங்க அப்பா செய்த செயல் தவறு இல்லை… ஒரு அப்பாவா அவர் அதை செய்திருக்கிறார்… உங்க மேல உள்ள பாசத்துல தான் அவர் அப்படி பேசியிருக்கிறார்… அதே நேரத்துல உங்க அப்பாவோட ஆசையை நிறைவேத்த உங்க காதலைச் குழி தோண்டி புதைச்ச என் புருஷனை மன்னிச்சிடுங்க…. ஆனா அதுல உங்களை விட அதிகம் காயப்பட்டது அவர் தான்… நீங்க கூட அந்த காயத்தை மறந்து புது வாழ்க்கையை அமைச்சுக்கிட்டீங்க… ஆனா இன்னமும் அந்த காயத்தோட தான் அவர் நடைபிணமா வாழுறார்… இனியாச்சும் அவர் மேல தப்பு இல்லன்னு நீ புரிஞ்சிகிட்டீங்கன்னா அதுவே எனக்கு போதும்…” என தழுதழுத்த குரலில் அவள் சொல்லிவிட்டு சாரதாவுடன் அகல, அசையாமல் நின்றாள் ரித்திகா…
வீடு வந்த சேர்ந்த சாரதாவிற்கு மனம் ஒருநிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருக்க, தான் உண்மையை இதுநாள் வரை சொல்லாமல் மறைத்ததற்கு சஷியிடம் மன்னிப்பு கேட்டவர், எந்த சூழ்நிலையிலும் என் மகனை விட்டு பிரிய மாட்டேன்னு எனக்கு சத்தியம் செய்து கொடு சஷிதா… என கேட்க, அவள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவர் கையின் மேல் தனது கையை பதித்தாள்… அந்த நிறைவோ என்னவோ, மறுநாள் காலை சஷி வந்து அவரை எழுப்பும்போது உயிரற்ற கூடாய் கிடந்தார் கட்டிலில்…
“அ….த்……தை………..” என சஷியின் அலறல் சத்தம் கேட்டு கீழே வந்த ரிஷி, பொம்மையை போல் கிடந்த சாரதாவைப் பார்த்து துடித்து போய் நிற்க, அவனை அந்நிலையில் பார்த்தவளுக்கு ஏனோ இதயமே நின்றது போல் இருந்தது… சாரதாவின் நினைவாகவே ரிஷி தனதறையில் அடைந்து கிடக்க, அவனை சாப்பிட வைக்க முயன்று தோற்றாள் முதல் நாள்… இரண்டாம் நாளும் அவன் மறுக்க, “நீங்க இப்படி சாப்பிடாம இருக்குறதை அத்தை பார்த்தா அவங்க ஆத்மா சாந்தி அடையுமா?... தன் பிள்ளை சாப்பிடாம இருக்குறதை பார்க்குற அவங்க ஆன்மா எப்படி அங்க நிம்மதியா இருக்கும்?... அவங்களுக்காகவாது கொஞ்சம் சாப்பிடுங்க… ப்ளீஸ்…” என தட்டை அவன் பக்கம் வைத்துவிட்டு அவள் சென்று சிறுது நேரம் கழித்து திரும்பி வந்த போது, அவன் “நான் சாப்பிடுறேன்ம்மா… நீ அங்க சந்தோஷமா இருக்கணும்மா…” என சொல்லிய வண்ணம் சாப்பிட்டு முடிக்க, பார்த்துக்கொண்டிருந்த சஷிக்கு தன்னை மீறி துக்கம் தொண்டையை அடைத்தது…
அடுத்து வந்த நாட்களில், அவன் ஓரளவிற்கு சகஜ நிலைக்கு வர, வழக்கம் போல அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது… அப்படியே சில மாதங்கள் சென்றுவிட, அவள் மனமோ அவன் காதலுக்காக ஏங்கியது… அப்போது ஒருநாள் அவன் வர தாமதமாக, அவனைத் தேடி அந்த மழையில் அவன் அலுவலகத்திற்கே சென்றுவிட்டாள் அவள் நடந்தே… அவளை அங்கே நனைந்த நிலையில் பார்த்தவன், வீடு வரும் வரை எதுவும் பேசவில்லை… வீட்டிற்குள் நுழைந்ததும், நான் வரமாட்டேனா?... எதற்காக இப்படி மழையில் அதுவும் இந்த ராத்திரி நேரத்தில் வந்தாய்?... என கோபப்பட, அவளுக்கோ அவனது அந்த உரிமையான கோபம் மனதில் பூஞ்சாரலாய்…
தனிமையில் அவன் அந்த நிலவோடு கதை பேசுவதை ரசித்துக்கொண்டிருந்தவளுக்கு, அவன் மனதின் வேதனை புரிய, அவனை அப்படியே அணைத்துக்கொண்டால் என்ன என தோன்றியது… ரித்திகாவை எண்ணியவளுக்கு, அவள் அளவுக்கு தான் அழகில்லை தான், எனினும் அந்த வானத்தில் உனக்கு பிடித்த இன்னொரு நிலவாய் நான் வந்திட நீ வழி செய்ய மாட்டாயா ரக்ஷித் என மெல்ல முணுமுணுத்தவளின் சத்தம் அவனை எட்டியதோ என்னவோ, அவளை என்றும் இல்லா திருநாளாய் அழைத்தான் வா என… மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மிதந்தவளை சட்டென ஆழிப்பேரலையாய் சுருட்டி எறிந்தது அவன் வார்த்தையும், அவன் நீட்டிய சில காகிதமும்… “என்னை சகிச்சிகிட்டு நீ இதுக்குமேலயும் கஷ்டப்பட வேண்டாம்… என்னால கஷ்டப்பட்டவங்க எண்ணிக்கை போதும்… இப்போ நீயும் அதில் சேருவது எனக்கு பிடிக்கலை… உனக்கான ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கோ… அதுக்கு நான் எந்த விதத்திலேயும் தடையா இருக்கமாட்டேன்…” என தான் கையெழுத்து போட்ட விகாரத்து பத்திரத்தை அவளிடம் கொடுத்ததும்,
தன் முக வருத்தத்தை அவனுக்கு காட்டாது, திரும்பி நின்று, “என்னை உங்களுக்கு நிஜமாவே பிடிக்கலையா?...” எனக் கேட்டாள் பிசிரடித்த குரலில்… அந்த குரல் அவனுக்கு சற்றே வலி கொடுக்க, அவன் எதுவும் பேசாமல் சென்றுவிட்டான் அங்கிருந்து… அவளிடம் விவாகரத்து பத்திரத்தை கொடுத்ததிலிருந்து நிம்மதி இல்லாமல் இருந்தவனுக்கு இரவில் தூக்கமும் வரவில்லை… புரண்டு புரண்டு படுத்து பார்த்தும் நித்திரை மட்டும் அவனை எட்டவில்லை கொஞ்சமும்… அவனைக் கைப்பிடித்த நாள் முதல் அவள் அவனுக்காக செய்த அனைத்தும் அவனது கண் முன் வர, தனக்கு என்ன நேர்ந்தது என புரியாமல் திணறினான் அவன்…