“மிருவை என்கிட்ட கொடுங்க!!” என்று அவள் குரல் கொடுக்கவும், மகனுக்கு பல் தூரிகையில் பற்பசையை பூசி கொடுத்துவிட்டு வெளியே வந்தான் ஷ்யாம்.
குளித்து முடித்து ஒப்பனையே இல்லாத தோற்றத்திலும் மிக அழகாய் இருந்தவளை நெருங்கி வந்தவன்,
“என்ன நீ ரொம்ப மிரட்டுற? சிரிச்சிட்டே இருந்தால் காமிடியன்னு நினைச்சியா? மிருதன் உனக்கு தான் பையன்.. ஆனா உனக்கு மட்டும் பையன் கிடையாது.. அதை உன் மனசுல பதிய வெச்சுக்கோ! நான் எப்பவும் இதே மாதிரி இவ்வளோ க்லோஸா நின்னு பேசிட்டு இருக்க மாட்டேன்.. சோ பயப்படாமல் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ” என்று தீவிரமாய் ஆரம்பித்து கிண்டலாய் முடித்து இரண்டடி பின் வாங்கினான் ஷ்யாம். சற்றுமுன் மிக அருகில் அவன் நிற்கவும் ராகினி மூச்சே விடாமல் நின்றிருந்ததை உணர்ந்து கொண்டான் ஷ்யாம்.
சட்டென விலகியவன், அவளுக்கு தனிமை கொடுக்க நினைத்து குளியல் அறையில் புகுந்து கொண்டான். ராகினியின் தம்பிக்குபின் ஒரு ஆணின் அருகாமையை ஷ்யாமிடம் தான் உணர்கிறான் மிருதன். அதனாலேயே அவனுக்கு ஷ்யாமுடன் இணைந்திருக்க மிகவும் பிடித்து போனது.
“ராஸ்கல்!” என்று ஒரே வார்த்தையில் தன் கோபத்தை வெளிப்படுத்திய ராகினி, “ இந்த வாண்டு கூட என்னை விட்டுட்டு அவன்கூட ஒட்டிக்கிட்டானே! இருக்கட்டும் பார்த்துக்குறேன்” என்று முணுமுணுத்தபடி, சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
சரியாய் அரைமணி நேரத்தில், ஷ்யாமும் மிருதனும் மாடியிலிருந்து கீழிறங்கி வந்தனர். அப்பாவும் மகனும் ஒரே வண்ணத்தில் உடையணிந்து கொண்டு கைப்பிடித்துக் கொண்டு வந்த காட்சி ராகினியின் மனதில் இனிதாய் பதிந்து போனது. நேற்றிலிருந்து மின்னலாய் அவ்வப்போது தோன்றி அவள் மறைத்த புன்னகை கீற்று இப்போது “ சரிதான் போ” என்று அவளுக்கு ஒழுங்கு காட்டி அழகாய் மலர்ந்திருந்தது.
புன்னகை சிந்தும் மனைவியின் முகத்தை ரசித்துக் கொண்டே இறங்கி வந்தான் ஷ்யாம். அவளிடம் அவன் பேசிடும் முன்னரே அவனது செல்ஃபோன் சிணுங்கியது. அவன் பேச பேச ராகினியின் முகத்தில் ஆச்சர்யம் படர்ந்தது. அவன் ஃபோனை வைத்ததுமே,
“ உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?” என்று வினவியவளை பார்த்து கேலியாய் புன்னகைத்தான் ஷ்யாம். அவள் முன் ஸ்டைலாய் கைக்கட்டி நின்றவன்,
“சோ என்னைப்பற்றி உனக்கு எதுவுமே தெரியாது !அப்படித்தானே? ஏழு வருஷமா டெல்லியிலேயே இருக்குறவனுக்கு ஹிந்தி தெரியாதா?” என்று அவன் கேட்கவும் ராகினியின் முகம் மேலும் மலர்ந்தது.
“டெல்லியா? அப்போ நாம டெல்லிக்கு போவோமா?” என்று கேட்டாள் அவள்.
“ ம்ம்ம் நான் ஒரு மாசம் லீவ்ல இருக்கேன்.. அது முடிஞ்சு போகணும்.. என் வே..” என்று அவன் சொல்வதற்குள்,
“ ஒரு மாசம் எப்போ முடியும்?” என்று கேட்டிருந்தாள் ராகினி.
“சொல்லுறேன்.. உன் கேள்விக்கு பதில் சொல்லுறதுக்கு தெம்பு வேணும்.. சோ சாப்பாடு போடுறியா?”என்று ஷ்யாம் கேட்கவும், மானசீகமாய் தலையில் கொட்டு வைத்துக் கொண்டாள் ராகினி. அவனுக்கு உணவு பரிமாறியவள், மிருதனுக்கு உணவு ஊட்டி விட்டு கொண்டிருந்தாள்.
சற்றுமுன்பு குளியலறையில்,“ மிரு, நான் உனக்கு டேடி அண்ட் ப்ரண்ட்.. ஆனா, என்னை விட மம்மிதான் உனக்கு முதல்ப்ரண்ட்..” என்று மகனுக்கு புரியும் விதத்தில் விளக்கி கொண்டிருந்தான் ஷ்யாம். தனது வருகையினால் அம்மா மகன் இருவரின் உறவினுள் மனக்கசப்பு வந்திட கூடாது என்று எண்ணினான் அவன்.
ராகினியின் உணர்வுகளுக்கு பெரும் மதிப்பளித்தான் ஷ்யாம். இப்போதும், மிருதனுக்கு அவள் ஊட்டி விட்டு முடித்ததும் அவளுக்கு சாப்பாடு பரிமாறினான் அவன். ராகினி திருப்தியாய் சாப்பிட்டு முடித்ததும், “நான் கொஞ்சம் வெளில போகனும்.. சீக்கிரம் வந்திடுவேன்” என்று கூறி காரை கிளப்பினான் அவன்.
ஷ்யாமிற்கு ராகினியின் திடீர் சந்தோஷத்திற்கான காரணம் புரிந்தது. ராகினி சங்கீதனுடன் டெல்லியில் தான் வாழ்ந்திருந்தாள். அவனது மரணத்திற்கு பின் தான் அவள் இங்கு வந்து விட்டிருந்தாள். சில நேரம், நாம் தொலைத்ததை தொலைத்த இடத்தில் தான் கண்டெடுக்க முடியும். அதை உணர்ந்தவன், உடனே அவளையும் மிருதனையும் டெல்லிக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தான்.
அதற்கான ஏற்பாட்டை செய்து முடித்துவிட்டு வீடு திரும்பியவனின் செவியில், “ கண்ணம்மா கண்ணம்மா” என்று ராகினி பாடும் ஓசை கேட்டது.
“ஓஹோ ப்ரின்ஸ் தூங்குறார் போல!” என்று சரியாய் அனுமானித்தவன், அவர்களை தொந்தரவு செய்யாமல் ஹாலிலேயே அமர்ந்து கொண்டான். மிருதன் தூங்கியதும் ஹாலுக்கு வந்த ராகினி, ஷ்யாமை பார்த்து ஒரு நொடி தயங்கி நின்றுவிட்டு சோபாவில் அமர்ந்தாள்.
“ நாளைக்கு நாம டெல்லிக்கு கிளம்பனும் ராகினி. ட்ரெஸ் பேக் பண்ணிடு!” என்று சுற்றி வளைக்காமல் விஷயத்தை சொன்னான் ஷ்யாம். ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியில் அவனைப் பார்த்தாள் ராகினி.
“ என்ன திடீர்னு? ஒரு மாசம் லீவ்ன்னு சொன்னீங்க? வேலை வந்துருச்சா?” என்று கேட்டவளை ஒரு நொடி இமைக்காமல் பார்த்தான் ஷ்யாம். “ உனக்காகத்தான்னு சொல்லலாமா? உடனே நீ ஒன்னும் என்னை இம்ப்ரஸ் பண்ணுறதுக்கு இப்படி முடிவெடுக்க வேணாம்னு இவ சொல்லிட்டா என்ன செய்யுறது ? எதுக்குடா வம்பு!” என்று அவனது உள்மனம் ஆபாய குரலில் எச்சரிக்க,