“ ஓ! என்ன நினைச்சுட்டு இருக்க நீ? பெரிய இவனா நீ? எதுக்கு என்னை விட்டுட்டு போன? எத்தனை தடவை ஃபோன் பண்ணினேன் எடுத்தியா நீ? நீ பாட்டுக்கு ஒரு வார்த்தைக்கூட பேசாமல் போற?” என்று ஒருமையில் தாவி அவனை திட்டிக் கொண்டிருந்தவள், ஷ்யாமின் சட்டையில் படிந்திருந்த ரத்தக்காயத்தை பார்த்து பதட்டமாகினாள்.
“ ஷ்யாம்.. என்னாச்சு ? அடி பட்டுருச்சா?” என்று கேட்டபடி முதல் முறையாய் அவனை தொட்டு பரிசோதித்தபடி பேசினாள். இவ்வளவு நேரம் சேர்த்து வைத்த ஆதங்கம் கண்ணீராய் உடைந்தது.
“ உங்களுக்கு ஒன்னும் இல்லைல? அப்போ மிரு.. மிருவுக்கு என்ன?” என்று பதட்டமாய் ஓட எத்தனித்தவளை தன் கைவளைவில் நிறுத்திக் கொண்டான் ஷ்யாம். அவன் காதலும் அழுத்தமும் பொங்கிட பார்த்த பார்வையில் அவள் கொஞ்சம் நிதானமாகினாள். ஆனால் அப்போதும் அவனது அணைப்பிலிருந்து விடுபட முயற்சிக்கவில்லை. ஒரு கையால் அவளை தன்னோடு அணைத்துக் கொண்ட ஷ்யாம், இன்னொரு கையால் அவளது கண்ணீர் துளிகளை அழுந்த துடைத்துக் கொடுத்தான்.
“இதற்குதான் உன்கிட்ட பேசாமல் ரூமுக்குள் ஓடினேன். சட்டையில் ரத்தக்காயம் பார்த்ததும் நீ பதறிடுவன்னு தெரியும்! அதான் உன்கிட்ட பேசலை. ஐ எம் சாரி ஃபார் தெட். ஆனா, நீ பயப்படுற மாதிரி ஒண்ணுமே இல்லைம்மா” என்றான் மென்குரலில்.
“நிஜமாகவா?” என்று விழி அகல கேட்டாள் ராகினி.
“ஆமாடா.. பார்ட்டின்னு சொன்னேன்ல? பார்ட்டிக்கு வரவேண்டிய ப்ரண்டுக்கு சின்ன எக்சிடண்ட். அதுவும் நம்ம வீட்டு பக்கம் தான்! நல்ல வேளையாய் அவன் எனக்கு ஃபோன் பண்ணுற நிலையில் இருந்தான். நீ ரூம்ல இருந்தியே அப்போ உன்னை கூப்பிட்டேன்.. பட் என் சத்தம் உனக்கு கேட்கல. உனக்காக வெயிட் பண்ண முடியாமல் தான், கிளம்பிட்டேன்மா. நீ ரூமில் இருக்கும்போது பையனை எப்படி விட்டுட்டு போறது? அதான் அவனையும் கூட்டிட்டு போனேன்..
ஆனால் மிரு கண்ணா எவ்வளவு தைரியசாலி தெரியுமா? ரத்தம் வழிந்த நண்பனை நான் கார்ல ஏத்தும்போது அங்கிள் யூ வில் பீ ஃபைன்னு மிருதான் சொன்னான்.. நீ அவனை எவ்வளவு தைரியசாலியாய் வளர்த்திருக்க!” என்று கூறியவன், பெருமையாய் ராகினியின் நெற்றி வகிட்டில் முத்தமிட்டான். அந்த ஒரு நொடி அவளுக்கு வேறு ஏதும் தோணவில்லை.
“ பயந்துட்டேன் ஷ்யாம்.. நீங்களும் விட்டுட்டு போயிடுவீங்களோன்னு” என்று சொல்லும்போதே அவளது உடல் நடுங்கியது! அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்ட ஷ்யாம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அவன் நினைத்திருந்தால், அப்போதே அவளை தன்னவளாக்கியிருக்க முடியும். ஆனால் அவன் ராகினியின் மனதில் தனக்கான காதல் வரவேண்டும் என்று காத்திருந்தான். அவளை சமாதனப்படுத்தி உறங்கவும் வைத்தான்.
அடுத்த சில நாட்கள் மிகவும் இனிமையாய் போனது. ஷ்யாம் ராகினியின் மனதை நெருங்கியிருந்தான். அடிக்கடி அவனைப் பற்றி நினைக்க ஆரம்பித்தாள் அவள். அவனுக்கொரு ஆபத்து என்று நினைத்து அழுததும் துடித்ததும், அவன் மார்பில் சாய்ந்து கொண்டதும் அடிக்கடி அகக் கண்ணில் நின்றது. அவள் கண்களில் அவ்வப்போது தெரியும் காதலைக் கண்டு குத்தாட்டம் போட்டான் ஷ்யாம். அதை ராகினியே சொல்லு நாளுக்காக காத்திருந்தான் அவன். விதியும் அவர்களின் கண்ணாமூச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தது.
ஒரு மாதம் விடுமுறை முடிந்தது. அன்று ராகினியுடன் ஷ்யாமும் காலை ஆறரை மணிக்கெல்லாம் எழுந்துவிட்டான்.
“ என்ன ஷ்யாம் இவ்வளவு சீக்கிரம்?”
“ இன்னைக்கு வேலைக்கு போகணும் டா”
“ ஓஹோ.. சரி நீங்க கிளம்புங்க.. நான் உங்களுக்கு ட்ரெஸ் எடுத்து வைச்சுட்டு சாப்பாடு ரெடி பண்ணுறேன்!” என்று அவள் சுறுசுறுப்பாகி கொண்டை போட்டுக் கொள்ள,
“ட்ரெஸ்ஸா அது..”என்று ஏதோ சொல்ல வந்தவனை தடுத்தாள் ராகினி.
“ தெரியும் என்ன சொல்ல போறிங்கன்னு.. நீ என் மனைவி அதுக்காக நீ இப்படி பணிவிட செய்யனும்னு அவசியம் இல்லை ! அதுதானே? எனக்கு மனப்பாடமே ஆச்சு ஷ்யாம்.. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க! போங்க!” என்று அவனை விரட்டிவிட்டு அவளும் தயாராக தொடங்கினாள்.
சில நிமிடங்களுக்குப்பின், “ராகி” முதல் முறையாய் அவளை செல்லமாய் அழைத்தபடி அங்கு நின்ற ஷ்யாமைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றிருந்தாள் ராகினி. அவள் அடுப்பை அணைக்காமல் விட்டதின் பலனாய் தோசைக்கல்லில் புகையாய் கிளம்பிட ஓடி வந்தான் அவன்.
“ஹும்கும்.. ஊரு முழுக்க தீ பிடிச்சா நான் அணைப்பேன்! நீ நம்ம வீட்டுலேயே தீயணைக்க வைப்பியா? அல்லது நெருப்புடா நெருங்குடான்னு பாட்டு பாடுற ஐடியாவில் இருக்கியா?” என்று கேட்டபடி அவன் ராகினியின் கன்னத்தில் தட்ட,
“ நீங்க.. நீங்க ஃபயர் ஃபைட்டர் ஆ (firefighter)?” தீயணைப்பு வீரன் சீறுடையில் இருந்தவனைப் பார்த்து வாயைப் பிளந்தாள் ராகினி.