தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 10 - சசிரேகா
சரியாக 6 மணிக்கு 10 நொடிகள் இருந்த நிலையில் அவசரமாக ரிஷியின் வீட்டுக்கு உள்ளே வந்து சேர்ந்த அர்ஜூனையும் நந்தினியையும் கண்ட ரிஷிக்கு நிம்மதியாகி போனது. தாத்தாவின் முன் வந்த அர்ஜூன் நந்தினியை பக்கத்தில் நிற்க வைத்து காட்டினான்
”தாத்தா இவள் என் தங்கச்சி பேரு நந்தினி” என சொல்லவும் அவரும் நந்தினியை பார்த்தார். நந்தினியும் அவரிடம் சென்று காலில் விழுந்து எழுந்தவள்
”வணக்கம்” என கை கூப்பி நின்றாள். அதைப்பார்த்து சிரித்த தாத்தாவும் அவளிடம்
”உட்காரும்மா” என சொல்ல அவளும் அர்ஜூனை பார்க்க அவனும் அவளுடன் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்துக்கொண்டான்.
தாத்தாவும் சரி அந்த வீட்டில் இருந்த அனைவருமே நந்தினியை ஆச்சர்யமாக பார்த்தனர். அழகாகவும் அமைதியாகவும் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும் கண்டவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்
”இந்த பொண்ணு ரொம்ப அழகாயிருக்காள்ல” என தினகரன் கருணாவை பார்த்து கேட்க அதற்கு அவன்
”ஏன் மத்த 3 பொண்ணுங்க கூட அழகாதான் இருக்காங்க அது உன் கண்ணுக்கு தெரியலையா”
“அப்படியில்லை மத்தவங்களும் அழகாதான் இருக்காங்க ஆனா அதுல கொஞ்சம் வித்தியாசம் தெரிஞ்சது இந்த பொண்ணை பார்க்கப்பறப்ப எனக்குள்ள ஏதோ ஆகுது” என அவளை பார்த்து வழிந்தவனிடம் கர்சீப்பை நீட்டினான் கருணா
”இந்தாடா வாங்கி துடைச்சிக்க முதல்ல வழியுது பாரு அந்த பொண்ணு அண்ணாவுக்காக வந்திருக்கா உனக்காக இல்லை”
“எப்படியும் அந்த பொண்ணை ரிஜக்ட் பண்ணிடுவாங்க அப்புறம் நான் பார்த்துக்கிறேன்”