பெட்டிக்கடைக்கு சென்று விசாரிக்கலானாள்.
”அண்ணா இந்த பக்கம் ஏதாவது மளிகை கடையிருக்குமான்னா”
“ஏம்மா நீ ஊருக்கு புதுசா”
“ஆமாம்ணா”
“இப்படியே நேரா போய் வலதுபக்கம் திரும்பினா நிறைய கடைங்க வரும்”
“ரொம்ப நன்றிண்ணா” என சொல்லிவிட்டு திரும்பியவளுக்கு அந்த பெட்டிக்கடையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் கண்ணுக்கு தெரிய அதையே பார்த்தாள்.
அந்த போஸ்டரில் இன்று ஒரு மளிகை கடை புதிதாக திறப்பதாகவும் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு போட்டி நடக்கும் என்றும் அதில் கலந்து கொள்ளும் 10 நபர்களுக்கு போட்டி வைத்து ஜெயித்தவர்களுக்கு பரிசுகளும் மளிகை பொருட்களும் இலவசமாக தரப்படும் என எழுதியிருக்கவும் அந்த கடைக்காரனிடம் கேட்டு அந்த போஸ்டரை எடுத்துக்கொண்டு காரிடம் சென்று டிரைவரிடம் காட்ட அவனும் அவளை ஏற்றிக்கொண்டு அந்த புதிய மளிகை கடைக்கு சென்று நிறுத்தினான்.
காரிலிருந்து இறங்கி கடைக்குள் வேலையாளுடன் நுழைந்தவளை வாசல் வரை வரவேற்றனர் கடையில் வேலை செய்த சர்வன்ட்டுக்கள்.
கடைக்குள் சென்றவள் அதன் பிரம்மாண்டத்தை பார்த்தாள் மளிகை மட்டும் அல்ல ஒரு பக்கம் குழந்தைகள் சாப்பிடும் உணவுகளும் மறுபக்கம் காய்கறிகளும் இருக்கவே நந்தினி நேராக போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று தன் பெயரை பதிவு செய்தாள். முதலில் வந்த பெண்களில் நந்தினியோடு சேர்த்து 10 பேரை தேர்ந்தெடுத்த நிர்வாகம் அவர்களிடம் ஆளுக்கு ஒரு கேள்வித்தாளை தந்து சரியான பதிலை டிக் அடிக்கும் படி சொல்ல அவர்களும் அதே போல செய்து தந்தார்கள். அதில் நந்தினிதான் சரியாக அனைத்து பதில்களையும் தந்ததால் வெற்றி அவளுக்கு சொந்தமானது.