உள்ளே நுழைந்தால் அங்கே அவளின் அப்பா, அம்மா, ராஜலக்ஷ்மி, பாலு, பவித்ரா என எல்லோரும் இருந்தனர்.
இனியாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“நீங்க எல்லாருமும் இந்த பங்ஷனுக்கு வந்திருக்கீங்களா மா”
“அக்கா என் கிட்ட சொல்லவே இல்ல”
“அது இருக்கட்டும். ஜோதி என்னடி இது இவளை சுடிதார்ல கூட்டிட்டு வந்திருக்க”
“சாரீ கட்ட சொன்னா அவ வர மாட்டேன்னு சொல்லிட்டாம்மா. அதான்”
“சரி. இங்க நிக்க வேண்டாம். வாங்க. அந்த ரூம் குள்ளே போய் பேசலாம்”
ஒன்றும் புரியாமல் நின்ற இனியாவின் கையை பிடித்து இழுத்தவாறு அறைக்கு இழுத்து சென்றார்கள்.
“என்னம்மா. நான் ஏன் சாரீ கட்டணும். அவ்வளவு முக்கியமானவங்க வீட்டு பங்ஷனா இது. ஆனா அக்கா என் கிட்ட சொல்லவே இல்லம்மா” என்று அதையே குற்றப் பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்தாள் இனியா.
எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
“ஐயோ என்ன” என்றாள் இனியா.
ஜோதி “அம்மா. நீங்களே சொல்லுங்க” என்றாள்.
“உன் நிச்சயதார்த்தத்துக்கு நீ சாரீ கட்டாம இந்த சுடிதார்லயா நிக்க போற” என்றார் லக்ஷ்மி.
சொல்லப்பட்ட விவரத்தை நம்புவதா வேண்டாமா என்று இனியாவின் மூளை குழம்பியது.
“என்ன” என்றாள் குழம்பியவளாக.
“இன்னைக்கு உன்னோட நிச்சயதார்த்தம்” என்றனர் அனைவரும் கோரஸாக.
விழித்துக் கொண்டு நின்ற இனியாவை ஜோதியும், பவித்ராவும் அனைத்துக் கொண்டு “சர்ப்ரைஸ்” என்றார்கள்.
ஜோதி தான் நம்ப முடியலையா என்றவாறே அவளை கிள்ளினாள்.
“அப்ப என் கிட்ட ஏன் சொல்லலை”
“அடி லூஸ். அதான் சர்ப்ரைஸ்” என்றாள் ஜோதி.
எப்படியோ அவளை சமாதானப்படுத்தி, நடப்பது உண்மை தான் என தெளிய வைத்து அவளை ரெடி செய்வதற்குள் எல்லோருக்கும் போதும் போதும் என்று ஆகி விட்டது.
சேலை கட்டி விட்டு அவளுக்கு தலை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் காலையில் மேக் அப் இப்போது தான் பழகுகிறேன் என்று கூறிய அந்த பெண்.
நடுநடுவே இனியா அவளையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த பெண்ணோ அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
இனியாவால் இன்னும் நம்ப முடியவில்லை. அவள் அவ்வாறு விழிக்கும் போதெல்லாம் இந்த ஜோதி இல்லை பவித்ரா யாராவது ஒருவர் கிள்ளி வேறு விடுகின்றனர். எனவே அந்த நினைவு வந்த வுடனே கையை மறைத்துக் கொண்டாள் இனியா.
அவர்கள் அதையும் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
அப்போது தான் நியாபகம் வந்தவளாக “அக்கா. அவருக்கு தெரியுமா” என்று கேட்டாள்.
“அப்பாடா. இப்பவாவது உனக்கு நியாபகம் வந்துதே, அவரை கூட்டிட்டு வரவும் பிளான் பண்ணியாச்சி. பங்ஷன் ஆறரைக்கு தான். சோ இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் அவர் வர். அவரெல்லாம் என்ன அப்படி ரெடி ஆக போறார். ஓரளவுக்கு சந்துரு அவரை ரெடி பண்ணி தான் கூட்டிட்டு வருவான்.”
“ஓ” என்ற இனியாவிற்கு சந்தோஷம் பொங்கியது.
“அக்கா”
“என்ன ஏதோ கேட்க போற போல”
“ம்ம்ம். அவர் வந்து ஷாக் ஆகும் போது நான் அதை பாக்கணுமே”
“அதெல்லாம் முடியாது, உன்னை பார்த்துட்டா சர்ப்ரைஸ் சர்ப்ரைஸாவே இருக்காது, விஷயம் அவருக்கு தெரிஞ்சி போயிடும்”
“அக்கா அக்கா ப்ளீஸ்”
“சரி சரி. ஓகே. அதுக்கும் பிளான் பண்ணிக்கலாம்”
“அது சரிக்கா. எப்படி எங்களுக்கே தெரியாம இப்படி பண்ணீங்க”
“நம்ம க்ளோஸ் ரிலேடிவ்ஸ் மட்டும் தான் கூப்பிட்டிருக்காங்க. இங்க நமக்கு ரிலேடிவ்ஸ் அவ்வளவா இல்லைல்ல, தெரிஞ்சவங்க மட்டும் தானே, அதிலயும் ரொம்ப க்ளோஸ் தான் கூப்பிட்டிருக்காங்க. காலைல நம்ம வீட்டுக்கு ரிலேஷன் எல்லாம் வரர்தா இருந்தாங்க. அதான் உன்னை ஏதேதோ சொல்லி அங்கிருந்து என் வீட்டுக்கு கடத்திட்டோம்”
காலையில் குழம்பிய அத்தனை கேள்விகளுக்கும் இப்போது அவளுக்கு விடை கிடைத்தது. சிரித்துக் கொண்டாள்.
இளவரசனை சந்துரு ஏதோ அவர்களின் முக்கியமான உறவினறின் வீட்டு நிச்சயதார்த்தம் என்று கூறி அழைத்து வந்தான்.
ஆனால் அவனை அழைத்து வருவது அவ்வளவு எளிதாக இல்லை.
நமக்கு தான் யார் கூடவும் காண்டாக்ட் இல்லையே, அப்படியே இருந்தாலும், நாம பாமிலியோட போயாகணுமா, அதுக்கு எதுக்கு இப்படி எல்லாம் கிராண்ட்டா ட்ரெஸ் பண்ண சொல்ற, இது போல ஆயிரத்தெட்டு கேள்விகளை அடுக்கியவனை தனி ஆளாக சந்துரு சமாளித்து கூட்டி வருவதற்குள் நொந்து நூடில்ஸ் ஆகி விட்டான்.
எப்படியோ அவனை அழைத்து வந்து விட்டான்.
அவன் வந்த உடனே எல்லோரையும் பார்த்து அதிசயித்து “ஓ ரொம்ப க்ளோஸ் ரிலேஷனா. எல்லோரும் வந்திருக்கோம்” என்றான்.
அவனை அங்கிருந்த ஒரு அறைக்கு அழைத்துக் கொண்டு போயினர்.
இனியாவை அங்கு தான் மறைத்து வைத்திருந்தனர்.
“அம்மா. யார் வீட்டு பங்ஷன். எவ்வளவு க்ளோஸ் ரிலேடிவ்வா இருந்தாலும், இன்னும் நிறைய நேரம் இருக்கும் போலருக்கே, நாம ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கோம். இங்க யாரையுமே காணோமே”
“இருக்காங்க. நம்ம ஊர்ல இருந்து வந்தவங்க எல்லாம் மாடில இருக்காங்க.”
“ஓ. இருந்தாலும் ரொம்ப இயர்லியா வந்த மாதிரி தான் இருக்கு” என்று திரும்ப கூறியவனை பார்த்து சிரித்து,
எல்லோரும் ஒன்றாக ஒன் டூ த்ரீ கூறி “உன் எங்கேஜ்மென்ட்டுக்கு நீ இவ்வளவு முன்னாடி கூட வர மாட்டியா” என்றனர்.
“என்ன” என்று திகைத்துப் போனான் இளவரசன்.
அவன் திகைத்துக் கொண்டிருக்கும் போதே மறைவில் இருந்த இனியாவை அழைத்து வந்தாள் ஜோதி.
அவன் பார்வையை விளக்க இயலாமல் தடுமாறி போனான்.