குழந்தைகள் சிறப்பு சிறுகதை - சின்ன முயலும் சிங்க அரசனும் - நாரா நாச்சியப்பன்
காவிரியாற்றங்கரையில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் ஓர் அரசாங்கம் நடந்தது. அந்த அரசாங்கத்தில் யார் மன்னராக இருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?
எந்தக் காட்டு அரசாங்கத்திற்கும் மன்னராக இருக்கக் கூடிய தகுதி சிங்கம் ஒன்றுக்கே இருந்தது. அதுபோல் அந்தக் காட்டுக்கும் ஒரு சிங்கம்தான் அரச ராக இருந்தது.
ஒரு நாள் இரவில் முழு நிலா தன் பால் ஒளியை வீசிக் கொண்டிருந்தது. அந்த அழகிய நிலவொளி யில் காட்டின் நடுவில் ஒரு வெட்ட வெளியில் அரசவை கூடியது.
உயர்ந்த அரியணை ஒன்றில் சிங்கமாமன்னர் அமர்ந்திருந்தார். அருகில் கூரிய வாள் தக தகவென மின்ன அதை வாயில் பற்றியபடி படைத்தலைவர் புலியார் நின்றுகொண்டிருந்தார். பாராங்கல்லாலான இருக்கைகளில் அமைச்சர்கள் வீற்றிருந்தார்கள். திரு நீறு பூசிய நெற்றியுடன் அமைச்சர் வேலனார் என்று சிறப்புப் பெயர் பெற்ற யானையாரும், பரிப்பெருமாள் என்று பெயர் பெற்ற குதிரையாரும் , சாணக்கியனார் என்ற பெயருள்ள நரியாரும், நந்தியார் என்ற பெயர் உள்ள காட்டெருதும், அமைச்சர்களாக வீற்றிருக்க, வேட்டை நாய்கள், காட்டெருமைகள் ஆகிய படைவீரர்கள் சூழ்ந்திருக்க அந்த அரசாங்கம் கூடியிருந்தது.
காட்டுவிலங்குகளின் பாதுகாப்பு, குடியுரிமை, உணவு விதிகள் போன்ற பல இன்றியமையாத சட்டங்கள் பற்றி அங்கு ஆய்வு செய்யப்பட்டது.
சற்றுத் தொலைவில் இருந்த ஒரு புதர் மறைவில் இருந்து ஒரு சின்ன முயல் இந்த அரசவை நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தது. அங்கு விற்றிருந்த அமைச்சர்களின் பெருமிதமான தோற்றமும் அவர்கள் கணீரென்று பேசிய கருத்துரைகளும் அந்தச் சின்ன முயலின் உள்ளத்தைக் கவர்ந்து விட்டன.