முயல் சொன்ன கருத்தை நினைத்துப் பார்க்கப் பார்க்க அது மிகச்சரியான கருத்தாகத் தோன்றியது சிங்கமன்னனுக்கு. ஆனால் தன்னைப்போலவே அடுத்த காட்டு மன்னனும் நல்ல எண்ணம் உள்ள வனாக இருந்தால் தான் இந்த முயற்சி வெற்றி பெறும் இல்லாவிட்டால் இது பைத்தியக்காரத்தனமாகவே கருதப்படும். இந்த நிலையில் முயலை ஆதரிப்பதா, வேண்டாமா என்று சிறிது நேரம் சிங்கம் சிந்தித்தது.
''விலங்கு இனத்தின் நன்மையை முன்னிட்டுக் கட்டளையிடுங்கள்" என்று முயல் குட்டி சொன்ன சொற்கள் சிங்கத்தின் மனத்தில் ஒரு மந்திரம் போல் பதிந்து விட்டன. முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே என்று அது நினைத்தது.
''குட்டிப் பயலே, இப்பொழுது நாம் பேசுவது எளிய செயலைப் பற்றியதல்ல. வாழ்வா, சாவா என்ற மிகப்பெரிய லட்சியத்தைப் பற்றியது ஆகும். ஆகவே இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உனக்கு ஒருநாள் தவணை தருகிறேன். நாளை இரவு இதே நேரம் வருவதற்குள் நீ எனக்கு விடை சொல்ல வேண்டும். உன் முயற்சியை நீ இப்பொழுதே தொடங்கலாம். நாளைப் பொழுதுக்குள் முடிவு தெரியா விட்டால் நாம் போர் செய்வது உறுதி.
"படைத்தலைவர் புலியாரே, நம் படைகளை யெல்லாம் ஆயத்த நிலையில் வைத்திருங்கள். எந்த நொடியும் கட்டளை பிறக்கலாம். அந்த நொடியிலேயே பகை மீது பாய நம் படைகள் அணிய மாகட்டும்.
சிங்கம் முயலுக்கு ஒப்புதல் கூறிய உடன், அதன் காலில் விழுந்து வணங்கி எழுந்து மற்ற அமைச்சர்களிடமும் ஆசி பெற்றுக் கொண்டு, அடுத்த காட்டை நோக்கிப் பாய்ந்து சென்றது.
அடுத்த காட்டில் ஆட்சி புரிந்தது ஒரு கிழட்டுச் சிங்கம். அதன் குகைக்குள் முயல் போய்ச் சேர்ந்த நேரத்தில் அது குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டி ருந்தது. குகை வாயிலில் யாரும் காவலுக்கு இல்லாத தால் முயல் நேரே உள்ளே சென்றது.