நிறுத்தி வைத்தால் சின்னஞ் சிறிய விலங்குகள் தொலைவிலேயே பயந்து திரும்பி ஓடி விடும். மீறி வருபவற்றை நம் வீர யானைகள் துதிக்கையால் பற்றித் தூக்கி மரங்களில் அடித்து மோதிச் சின்னாபின்னமாக்கி விடும். மிக எளிதில் நாம் வெற்றி பெறலாம்'' என்று கூறியது.
அடுத்த அமைச்சராகிய பரிப்பெருமாள் என்ற குதிரையார் தம் தொண்டையைக் கனைத்துக் கொண்டு தம் கருத்தைக் கூறலானார்.
“மன்னருக்கு மன்னனே, மாவீரனே, சிங்க வேந்தே, உன் பொன் அடிக்கு வணக்கம். நம் காட்டில் உள்ள குதிரைகள் எண்ணிக்கை மொத்தம் 925 ஆகும். இவற்றில் சின்னஞ் சிறுசுகள், நோய் நொடி உற்றவை, நொண்டிகள் ஆகியவற்றைத் தள்ளி விட்டால் எண்ணூறுக்குக் குறையாமல் இருக் கின்றன. அத்தனை குதிரைகளும் போர்ப்பயிற்சி மிக்கவை. தாங்கள் உத்தரவிட்டால் இப்பொழுதே நான் சென்று எல்லாக் குதிரைகளையும் அழைத்துக் கொண்டு அடுத்த காட்டின் மீது படையெடுக்கிறேன். வெற்றி நமதே, விடை கொடுங்கள்” என்று கூறியது.
அடுத்து சாணக்கியனார் என்ற பெயருடைய அமைச்சர் நரியார் பேசத் தொடங்கினார்.
"அரசே, ஒரு பகைவன் போர் தொடுக்கத் திட்டம் தீட்டுகிறான் என்றால் ஏதோ அவனிடம் புதிய பலம் சேர்ந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு நாளும் அடங்கிக் கிடந்த அடுத்த காட்டான், நம் மீது படையெடுக்கிறான் என் றால், அவனுக்கு யாரோ மறைமுகமாக உதவி செய் கிறார்கள் என்று பொருள். ஆகவே, நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தக் காட்டுக்குள் முதலில் நம் ஒற்றர்களை அனுப்பி உளவு பார்த்து நிலைமைகளைச் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். படையெடுப்பதற்கு முடிவு செய்த காரணம் தெரிந்தால் அதற்குத் தகுந்த தந்திரங்களைக் கையாண்டு எதிரியை எளிதாக முறியடிக்கலாம்.