குழந்தைகள் சிறப்பு சிறுகதை - தேவதையும் சிட்டுக்குருவிகளும் - நாரா நாச்சியப்பன்
திருவல்லிக்கேணி பாரதி சாலையில் ஓர் அரச மரம் இருக்கிறது. அந்த அரச மரத்தின் அடியில் ஒரு பிள்ளையார் இருக்கிறது. அந்த அரச மரத்தின் கிளை ஒன்றில் இரண்டு சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன.
அந்த இரண்டு சிட்டுக் குருவிகளும் என்றும் இணைபிரியாமல் இருந்தன.
ஒன்று ஆண். இன்னொன்று பெண். இரண்டும் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்லும். எது கிடைத்தாலும் ஒன்றாகத்தான் தின்னும். என்ன செய்தாலும் ஒன்றாகத்தான் செய்யும்.
பாரதி சாலையில் நடந்து செல்லும்போது வானத்தை நிமிர்ந்து பார்த்தால் மேலே அந்தச் சிட்டுக் குருவிகள் இரண்டும் ஒன்றாகப் பறந்து செல்வதைப் பார்க்கலாம்.
சாலையின் ஓரத்தில் நின்று பார்க்க வேண்டும். நடுவில் நின்று பார்த்தால் பார்க் கிறவர்கள் மேல் பேருந்து ஏறிவிடும்.
நாள்தோறும் அவை கடற்கரைக்குச் சென்று வரும். கடற்கரையில் அவற்றிற்கு நிறையத் தீனி கிடைப்பதால், மாலையில் அங்கு போய் விடும். கடற்கரையில் கூடும் மக்கள் கொறிக்கும் போது தவறிவிழும் தின் பண்டங்கள் நம்சிட்டுக்குருவிகளுக்குத் தீனிப் பொருள்கள்.
ஒரு நாள் அந்தச் சிட்டுக் குருவிகள் இரண்டும் கடற்கரையில் தீனி பொறுக்கித் தின்று விட்டுத் தங்கள் கூட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. அப்போது அவற்றின் எதிரில் ஓர் அழகான பெண் வந்து கொண்டிருந்தாள். அவள் நீலச் சேலை அணிந்திருந் தாள். அவளுடைய கூந்தல் காற்றில் விரிந்து ஆடிக் கொண்டிருந்தது. அவள் கண்களில் அருள் ஒளி தோன்றியது.
சிரித்த முகத்தோடு அன்பு வடிவமாக வந்து கொண்டிருந்த அந்தப்பெண்மணியைக் கண்ட சிட்டுக் குருவிகள் அவள் எதிரில் பறந்து வந்தன. அவள் தன் இரு கைகளையும் நீட்டினாள். சிட்டுக் குருவிகள் இரண்டும் அவளுடைய இரண்டு உள்ளங்கைகளிலும் போய் உட்கார்ந்தன.