சொன்னேன். "புஜாங்கம், சல்லடம் ஒண்ணுமில்லே பானூ! அவரெக் கேக்ககூட கேட்டேன். ஒளிச்சி வெச்சிட்டார்னு சொல்றியா?"
பானு கோபத்துடன் முகத்தைச் சுளித்தான். கன்னத்தின்மீது திருஷ்டிப்புள்ளி இன்னும் நன்றாகத் தெரிந்தது.
"நீங்க ரெண்டு பேரும் நல்லாவே இருக்கறீங்க. மத்தியிலே என் மேலே என்ன உனக்குக் கோவம்?" என்றேன் முகத்தைச் சுளித்துக்கொண்டு.
பானு கண்களை இறக்கிக்கொண்டு சிரித்தாள். நிறைந்த மனதுடன் திருமணத்திற்குத் தயாராகும் கன்னிப்பெண் அவ்வளவு வெளிப்படையாகச் சிரிக்க முடியாது போலும்! அந்தச் சிரிப்பில் ஆயிரம் எண்ணங்கள்! கோடி விருப்பங்கள்!
பானுவின் கழுத்தில் - அவர் - மணமகன் - தாலியைக் கட்டும்பொழுது எனக்கு வேண்டியவர் யாரோ தூரமாவது போல் - நிரந்தரமாக எதையோ நான் இழப்பதுபோல் வேதனை தோன்றியது. இப்பொழுது பானு என் தங்கையல்ல. ராஜசேகரத்தின் மனைவி! இனி அண்ணனுடன் மணிக்கணக்கில் பேசுவதற்கு, விழுந்து விழுந்து சிரிப்பதற்கு வாய்ப்பு ஏது? எல்லாருடன் சேர்ந்து கையிலிருந்த அட்சதையை விசிறிவிட்டு, ஓசையில்லாமல் கண்ணை ஒத்திக் கொண்டேன். உள் ஆத்மா பானுவை வாழ்த்தியது - என் தங்கை ஆயிர மாண்டுகள் நன்றாக இருக்கவேண்டும், தாய்மைப் பேறு பெற்று, எல்லா நலங்களும் பெற்று விளங்க வேண்டும்!
மணமகன் இப்பொழுது மாமாவாகி அமர்ந்தார். மருமகன் போகும்வரையில் என்னை இருந்து போகுமாறு சொன்னாள் சித்தி. அந்த நான்கு நாட்கள் நகைச்சுவை பரிகாசங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாகக் கடந்தன. ஒரு முறை "நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி மாமா! எங்க தங்கெ உங்களுக்கு மனெவியா கிடெச்சா" என்றேன் சிரித்துக்கொண்டு.
"இல்லே இல்லே! உங்க தங்கெதான் அதிர்ஷ்டசாலி.என்னெப்போல புருஷன் கிடெச்சான்."
"சொந்தப் பெருமையெ டமாரம் அடிச்சிக்கிறீங்களா?" என்றேன்.
"வேறெ யாரும் இல்லேன்னா என்ன பண்ணுவாரு சொல்லு?" என்றாள் பானு. மூவரும் சிரித்துக்கொண்டோம்.
அவ்வளவு புதிதிலேயே மாமா பானுவைச் சீப்பு எடுத்துக் கொடுக்கச் சொல்லியோ - சட்டைக் கைகளை மடிக்கச் சொல்லியோ - பூட்ஸ் துடைக்கச் சொல்லியோ ஏதாவது ஒரு வேலை வாங்கிக்கொண்டு இருப்பார். பானு அவற்றை யெல்லாம் அப்படியே ஒன்று விடாமல் செய்வதற்கு வெட்கப்படுவாள். எந்த அளவு குறையாக நடந்தாலும், நேரங் கடந்தாலும் அவர் சினந்துகொள்வார். நேர்த்தியான பானுவின் முகம் சற்றுச் சிறுக்கும். அதை அவர் புரிந்துகொள்வாரோ இல்லையோ குறைந்தபட்சம் கவனித்ததாகக்கூடக் காட்டிக்கொள்ள