மாட்டார். எனக்கு ஏதோ ஒரு வகையில் கஷ்டமாக இருக்கும். பானு அடிமை ஆய்விட்டாளா? எல்லா விதத்திலும் பானுவை அதட்டி வேலை வாங்கும் மனிதர் வந்து சேர்ந்தாரா? மென்மையான பானுவின் மனத்தை நோக வைக்கக் கூடாது என்று - பானுவைச் சிறப்பானதோர் முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
நான் போவதற்கு முன்னர் பானுவைத் தனியாகச் சந்தித்தேன். "பானூ! இனி உன் எதிர்காலம் முடிவாயிட்டுது - அதெ எல்லா விதத்திலும் இன்ப மயமாக்கிக்கற்து உன் கையிலே இருக்குது. மாமாவுக்குக் கொஞ்சம் கோவம் அதிகம் இல்லியா? அதுக்கு நீ கொஞ்சம் சாந்தமா இருக்கணும். அம்மாகிட்டே கோவத்தெக் காட்னா மாதிரியே இருந்தா நல்லா இருக்காது தெரியுமா! எல்லா விதத்திலும் உனக்குப் பொருத்தமான புருஷனுடன் சாக்கிரதெயா, பக்குவமா..." அதற்கு மேல எனக்குப் பேச்சு வரவில்லை. பானுவின் தலைமீது கனமான சுமையைத் திணிப்பது போல - ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் திரிந்துவந்த பானுவை யாரிடமோ ஒப்படைத்துவிட்டது போலத் தோன்றியது.
"அண்ணா!" என்றாள் பானு. சில வினாடிகள் அவளால் ஒன்றும் பேசமுடியவில்லை.
"எனக்கு மாமாவெப்பத்தி எந்தப் பயமும் இல்லே அண்ணா! உண்மையிலே என் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்குது" என்றாள் கீழே தரையைப் பார்த்தபடியே. பானு மனம் திறந்து யாரிடமாவது சொல்லி இருக்கிறாள் என்றாள் இதுவரை என்னிடம் மட்டும்தான். "உண்மெதான் பானூ! உன் கல்யாணப் பத்திரிகையெப் பாத்தப்போ ராஜசேகரம்னா என்னவோன்னு தோணிச்சே தவிர இப்பொ எனக்கு மகிழ்ச்சியா இருக்குது" என்றேன். பிறகு என் படிப்பு விஷயம் வந்தது. மருத்துவம் படிக்கச் சொன்னாள் பானு - "இப்பொ எனக்கு அந்த ஆசெ இல்லே பானு! பீ.ஏ.க்குப் போறேன். உனக்கு இஷ்டம்தானே?". பானு வேறு ஒன்றும் வாதிக்காமல் சரி யென்றாள்.
பானு மூன்றாவது மாதம் மாமாவிடம் சென்றுவிட்டாள். தன் புதுக் குடித்தனத்தைப் பற்றி, மாமாவின் கோபதாபங்களைப் பற்றி, தான் கற்றுக்கொண்டுவரும் வேலைகள் பற்றி விவரமாகக் கடிதங்கள் எழுதுவாள். நாட்கள் மகிழ்ச்சியுடன் கழிந்து வந்தனவாம். மாமாவுக்குக் கோபம் மட்டும் குறைவதில்லையாம். விடியற்காலம் எழுந்து வேலையில் மூழ்கவேண்டும் என்றால் சற்றுச் சலிப்பாக இருக்கிறதாம். ஒவ்வொரு முறை இந்தத் தொல்லை எல்லாம் ஏன் என்று இன்னதென்று விளங்காத ஒரு வெறுப்பு வருகிறதாம். அடுத்த வினாடியே எதனாலோ அளவுகடந்த பொறுமை வந்து அழுகின்றாளாம். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் அவளுக்கு எப்போதும் நானே நினைவு வருகிறேனாம். சிரித்துக்கொண்டு, புதிய