குடித்தனத்தில் அனுபவமில்லாத தங்கைக்கு எனக்குத் தோன்றிய தைரியம் சொல்லிப் பதில்கள் எழுதி வந்தேன்.
அடுத்த ஆண்டு வருவதற்குள் பானு தாயாகக் கூட ஆகிவிட்டாள். அரசகுமாரனைப் போன்ற மருமகனைப் பார்த்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன். தாய் தந்தையரிடம் இருந்த அழகெல்லாம் திரண்டு அவனுக்கு வந்தது. சிவப்பாக ஒல்லியாக, கதிரவன் கதிர்போல் ஒளிவீசும் அவன் ஓராண்டு முடிவதற்குள்ளாகவே டக்டக்கென்று நடைபோட்டு வருவதைப் பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்போல் தோன்றும். பானு அதிருஷ்டக்காரிதான்! எல்லா நலங்களையும் பெறக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறாள். அந்த இரண்டு ஆண்டுகளில் பானு மிகவும் மாறிவிட்டாள். பொறுமை, சாந்தம், பணிவு அனைத்தும் பழக்கமாகி விட்டன.
"நீ ரொம்ப மாறிட்டே பானு!" நாம ஸ்கூல்லே படிக்கிறப்போ இப்படி ஏன் நீ இல்லே? இனி எப்பவும் அப்படி இருக்கமாட்டியா?" என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன். பானு ஒரு விதமாகச் சிரித்தாள். "நான் மறுபடியும் அப்படியே இருக்கணும்னா அன்பு காட்ற அண்ணன் ஒர்த்தன் மட்டும் பத்தாது." எனக்கென்னவோ புரியவில்லை. "என்ன பானு!" என்றேன். "சரிதான்! ஒண்ணு மில்லே போடா!" என்று சொல்லிவிட்டாள்.
"நீ ரொம்ப பெரிய மனுஷி ஆயிட்டாமாதிரி என்னெ இன்னும் சின்ன பையனாக்கப் பாக்கறெ. பாக்கப்போனா நீயே என்னெவிடச் சின்னவ" என்றேன் கோபத்துடன். பானு சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஏதோ ஒரு குறை இருந்தது.
தேர்வு முடிவுகள் தெரிந்த பிறகு பானுவுக்கு மகிழ்ச்சியுடன் கடிதம் எழுதினேன். "பானு! நான் எம்.ஏ. உங்கள் பட்டணத்தில் வந்து படிக்கவேண்டும் என்று எண்ணி இருக்கிறேன். இந்த நகரத்தை மாற்றிவிட வேண்டும் என்று எனக்குப் படுகிறது. மீண்டும் உனக்கு அருகாமையில் வருவதற்கு எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது." ஆனால் எனக்கு ஒரு ஐயம் வந்தது. பானு என்னை அவர்களுடைய வீட்டிலேயே இருந்து படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பாளோ என்னவோ! என்ன செய்வது? அவர்கள் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக இருந்துவரும் தம்பதிகளாவர்; அவர்களுடைய ஆனந்தத்திற்குக் குறுக்கே நான் போவதா. மேலும் என் படிப்பும் பானுவின் பேச்சால் சரியாக நடைபெறாமல் போகலாம். பானு எழுதிய, பதிலில் அதைப் பற்றிய குறிப்பே இல்லை. என் வருகையை எதிர்பார்த்துக் கொள்ளை ஆசையுடன் இருக்கிறாளாம். என் மடியில் தலைவைத்து ஆசைதீர அழ வேண்டும் போல் இருக்கிறதாம் - அப்படி எழுதி யிருந்தாள். "பைத்தியக்கார பானு!"
தொடரும்