கிடையாது.
சொன்னால் பானு நம்ப மறுக்கிறாள் - என் கர்மம்!
"நீ ஒரு திருடன். உனக்கே இஷ்டம் இல்லே. சும்மா பெரியப்பா மேலே பழிசுமத்தறே. நீ அடம்பிடிச்சி உக்காந்தா ஏன் நடக்காது? யாரின்னா செய்வாங்க?" என்றாள்.
நான் சிரித்தேன். "நான் ஏன் அடம் பிடிக்கணும்? உன் சுசீலா இல்லேன்னா உலகத்திலே பொண்ணுங்களுக்கே பஞ்சம் வந்துட்டுதா?"
"உலகத்தலே எப்போதும் பெண்களுக்குப் பஞ்சம் வராது ராவு சார்!" என்றாள் ஏளனமாக. அதற்குள் தீவிரமாகத் தொடங்கினாள். "சுசீலாவின் பார்வையிலே உனக்குள்ள மதிப்பு அலாதியானது. அதெ வேற எந்தப் பெண்ணோட மனசுடன் ஒப்பிட முடியாது. அவளுக்குப் புத்தி தெரிஞ்ச நாள்ளேயிருந்து உன்னையே நேசித்து வர்றா..."
"உனக்கென்ன பீஸ் கொடுக்கறேன்னு சொன்னா?"
பானு ஒரு நிமிஷம் நிறுத்தி என் கண்களை உற்றுப் பார்த்துச் சிரித்துக்கொண்டே "உன் குணம், அவளோட அழகு சேர்ந்த மருமகளைக் குடுக்கிறேன்னு வாக்குக் குடுத்திருக்கிறா"- பானு கண்களால் சிரிக்கும்பொழுது எனக்கு வெட்கமாக இருந்தது. அதென்னவோ பானு இப்படிப் பெரிய மனுஷியைப் போல எல்லா விஷயங்களையும் வெட்கம் இல்லாமல் பேசத் தொடங்கிவிட்டாள்.
"யாரெக் கேட்டு உனக்கு அந்த வாக்கெக் கொடுத்தாளாம்?" என்றேன் கோபம் வந்தாற்போல் நடித்துக் கொண்டே.
"அதென்னவோ! அவளெக் கேளு" என்று சொல்லி விட்டாள்.
சிறிது நேரம் ஆன பிறகு "மாமா இன்னும் வரல்லியே என்ன?" என்று கேட்டேன்.
"டைம் எட்டாகப் போவுது. வருவார்...." என்றாள்.
"மாமா பத்திய விஷயங்க சொல்லேன் பானு!" என்று கேட்டேன்.
"நாளலேயிருந்து நீயே பாக்கப்போறே ஆவட்டும்" என்றாள் சிரித்துக் கொண்டே. ஒன்பது கூடக் கடந்து விட்டது. எத்தனை முறை சாப்பாட்டுக்கு எழுந்திருக்கச் சொன்ன போதிலும் "மாமாவும் வரட்டும்!" என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். அவர் வருவதற்கு மேலும் ஓர் அரை மணி பிடித்தது. நாள் தோறும் அவர் வரும் நேரம் அதுதானாம். இந்தக் கால உத்தியோகத்திற்கும் மனைவி மக்களுக்கும் பொருத்தமில்லை போலும்!
"நல்லா இருக்கீங்களா? அதுக்குள்ளேயே ஹாஸ்டல்லே இறங்காமெ நாலு நாள் இங்கே இருந்து போகக் கூடாதா?" என்று பேச்சைத் தொடங்கினார்.
"ஸ்டேஷன்லே இருந்து நேராப் போயிட்டேன் மாமா!