ஏராளமான, அளவில்லாத சந்தோஷம் வேணும்!...எப்படி?
எனக்குத் தெரியும்! என்னிடத்தலெ மாறுதல் உண்டாற நாள். நான் நானாக இல்லாமல் போகும் நாள் சந்தோஷமா, சுகமா இருக்க முடியும். நான் ஒரு மனுஷி எங்கற்தெ முழுசா மறந்துபோகக் கூடிய நாள். பெண் மேல் நல்லெண்ணமே இல்லாத புருஷனோடு வாழக்கூடிய நாள், புருஷனின் ஆதரவு இல்லாமெ பெண்ணுக்கு வாழ்க்கெ இல்லேன்னு நம்பக் கூடிய நாள். சாப்பாட்டை விடத் தன்மானம் பெரிசில்லேன்னு மனசெக் கொண்ணுக்கற நாள் --- அன்னக்கி ஒரு கவலெயும் இல்லெ. எல்லாம் சுகம் தான்! எல்லாம் சந்தோஷமே! ஆனா என்னிடத்தில் அந்த மாறுதல் வரும்னு சொல்றியா? வரணும்னு சொல்றியா?" பானுவின் கண்களி லிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. நான் வியப்போடு பானுவின் வேதனையைப் பார்த்துக்கொண் டிருந்தேன். பானுவின் பேச்சிலே ஆவேசம் கரை அறுத்துக்கொண்டு வந்தது. பானு அனுபவிக்கும் மன வேதனை எல்லை மீறிக் கொண்டிருந்தது.
" பானூ! உன் கேள்விங்களுக்குச் சமாதானம் ஒண்ணும் எனக்குத் தோணல்லே. சொல்லணும்னு நினெச்சாலும் இப்பொ ஆணாக யிருக்கும் எனக்கு அந்த அருகதெ இல்லெ."
" இனி நான் எதெப் பத்தியும் பேச மாட்டேன், இருந்தாலும் எனக்கு ஒரு ஆசெ இருக்குது. என் மகன் வளந்து பெரியவனாகி முன்னுக்கு வரணும்.இலட்சியங்க நிறெஞ்ச மனிதனா விளங்கணும். ஆண்உலகத்தல, இருட்டுச் சமூகத்தலெ மாணிக்கமா ஒளி வீசணும். அநியாயத்தெப் பாத்தா சகிக்கமுடியாத, அக்ரமத்தெப் பாத்தா ஆவேசப்படும், துர்ப்பாக்கியசாலிங்களெப் பாத்தா கண்ணீர் விடும் புனிதமான மனிதனாகணும். அந்த நாள்----அந்தநாள் எப்பொ வரும்? சொல் அண்ணா!"
"வரும் பானூ! தவறாமெ வரும். உன்னெப் போல நல்ல தாயின் வளப்புலெ உன் மகன் உதயன் முழு மனிதனாக உருவாவது நிச்சயம்."
பானு வேதனையுடன் சிரித்தாள். "ஆனா...அண்ணா! என்னக்காவது அந்த வளப்புலெ குறை வந்தா...?"
"பானூ! என்ன அப்படிப்பேசறே?"
"ஏன் அண்ணா அவ்வளவு பயம்? நீதான் இருக்கறியே? என்னெ உனக்குத் தெரியும். என் ஆசெயும் உனக்குத் தெரியும்."
"பானூ! நீ இப்படிப் பேசற்து நல்லா இருக்குதா பானூ! அண்ணன் உனக்கு எந்தக் கஷ்டத்துக் கானாலும், எந்தச் சுகத்துக் கானாலும் தொணெ இருப்பான். அதுக்காக இவ்வளவு கடினமான கடமெயெ என் மேல சுமத்தறியா? அந்த நாள் எப்பவும் வராது. நீ ஒரு தாய். அந்தக் கடமெயெ நீதான் நிறைவேத்தணும். பானூ! உனக்கு ஏதாவது நடந்தா அண்ணன் என்ன