ஸ்தம்பித்து உணர்விழந்து நிற்கும் மகனை ஸ்வர்ணம் கண்களில் நீர் பொங்க ஏறிட்டுப் பார்த்து. "சீ! சீ! உனக்குப் புத்தி கெட்டுவிட்டதாடா ரகு? ஊரார் பெண்ணை அடிக்க உனக்கு என்னடா அப்படிப் பாத்தியம் ஏற்பட்டுவிட்டது? ஊரிலே நாலுபேர் என்ன சொல்லமாட்டார்கள்? புருஷன் - மனைவி தகராறு என்று உலகம் ஒத்துக்கொள்ளாது அப்பா. நடுவில் நான் ஒருத்தி இருக்கிறேன் பாரு" என்றாள். அவள் கண்கள் கண்ணீரால் நனைந்திருந்தன.
ஸரஸ்வதி ரகுபதியைத் தன் அழகிய விழிகளால் சுட்டு விடுவதுபோல் விழித்துப் பார்த்தாள். மானைப்போல் மருண்டு பார்க்கும் பார்வை ஒரு விநாடி அனல் பொறிகளை உதிர்த்தது.
"ரொம்ப அழகாக இருக்கிறது அத்தான்! உன்னுடைய போக்கு கொஞ்சங்கூட நன்றாக இல்லை. என்னாலேதானே இந்தத் தொந்தரவுகள் எல்லாம் ஏற்படுகின்றன? நான் எங்கேயாவது தொலைந்துபோகிறேன்" என்று படபட வென்று கூறிவிட்டு, கன்னங்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
ஸரஸ்வதி கூறியதைக் கேட்டதும், சாவித்திரி 'விசுக்' கென்று எழுந்து ”எனக்காக இங்கிருந்து யாரும் போக வேண்டாம். எனக்கும் என் மனுஷாளைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நானே புறப்பட்டுப்போகிறேன். ஆமாம்...." என்று கூறி, பீரோவிலிருந்து புடைவைகளை எடுத்துப் பெட்டியில் வைக்க ஆரம்பித்தாள்.
தலையில் அடிபட்ட நாகம்போல் ரகுபதியின் கோபம் மறு படியும் 'புஸ்' - என்று கிளம்பியது. அவன் அலட்சியத்துடன் அவளைப் பார்த்து, "பேஷாய்ப் போயேண்டி அம்மா: நீ இல்லாமல் இந்த உலகம் அஸ்தமித்துவிடப்போகிறதா என்ன?
ஹும்.. ஹும் . . என்னவோ மிரட்டுகிறாயே?" என்றான்.
"நன்றாக இருக்கிறதடா நீ அவளைப் போகச் சொல்லுகிறதும், அவள் புறப்படுகிறதும்! பிறந்தகத்திலிருந்து வந்து நான்கு மாசங்கள் கூட முழுசாக ஆகவில்லை. அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டுமானால், சண்டை கூச்சலில்லாமல் சௌஜன்யமாகப் போகிறது தான் அழகு" என்று வேதனை தொனிக்கும் குரலில் கூறினாள் ஸ்வர்ணம்.
ரகுபதி கோபத்துடன் தாயை உறுத்துப் பார்த்துவிட்டு, மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றான். சாவித்திரி தன்னை எவ்வளவுதான் சுட்டுப் பேசினாலும், ஸரஸ்வதியின் கபடமற்ற மனம் அதைப் பாராட்டாமல், அவளை எப்படியாவது ஊருக்குப் போகவிடாமல் தடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது. ஆகவே அவள் அத்தை ஸ்வர்ணம் கீழே சென்றபின்பு உரிமையுடன் சாவித்திரியின் பக்கத்தில் உட்கார்ந்து அவள் தோள் மீது தன் கையை வைத்து, "சாவித்திரி! அசட்டுத்தனமாக இப்படி யெல்லாம் செய்யாதே அம்மா. அத்தானின் மனசு தங்கமானது. தங்கத்தை உருக்கி, எப்படி இழுத்தாலும் வளைவது மாதிரி அவன் மனசை நீ அறிந்து,