சோர்ந்துபோயிருந்த மங்களத்தின் மனத்தில் நம்பிக்கை ஊற்றெடுத்தது. ரகசியமாகப் பிள்ளையின் காதில், "சந்துரு! குடும்பச் செலவிலிருந்து சேர்த்த பணம் நூறு ரூபாய்க்குமேல் பெட்டியில் இருக்கிறது. சரிகை வேஷ்டியும், புடைவையும் வாங்கி வந்து உன் பெட்டியில் வைத்து வை. அப்பாவுக்கு இதெல்லாம் தெரியவேண்டாம்" என்றாள்.
'ஆகட்டும்' என்று தலையை அசைத்துவிட்டு கையிலிருந்த காகிதத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு யோசனையுடன் உட்கார்ந்திருந்தான் சந்துரு. 'தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை மட்டும் வருவது சம்பிரதாயமில்லை அல்லவா? ரகுபதியுடன் வரக்கூடியவர்கள் அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்? ஸரஸ்வதி வருவாளா? இதற்குள்ளாக அவள் மனம் நம்மைப்பற்றியும், நம் குடும்பத்தைப்பற்றியும் என்ன அபிப்பிராயம் கொண்டு விட்டதோ? அவசியம் ஸரஸ்வதியையும் அழைத்து வரச்சொல்லி எழுதுகிறேன். தவறாக இருந்தாலும் இருக்கட்டும். சரியாக இருந்தாலும் இருக்கட்டும்' என்று துணிவுடன் கடிதத்தை எழுதி முடித்தான். அவன் சாவித்திரியைப் புக்ககத்துக்கு அழைத்துப் போனபோது ஸரஸ்வதியுடன் பேசுவதற்குப் பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டான். சுருக்கமாகவும் நிதானமாகவும் இரண்டொரு வார்த்தைகளில் ஸரஸ்வதி பதிலளித்துவிட்டுச் சென்று விடுவாள்.
அவன் அங்கிருந்த நான்கு தினங்களில் ஒரு தினம், அதி காலையில் ஸரஸ்வதி தோட்டத்தில் பூஜைக்காக மலர்கள் பறிக்கும்போது சந்துருவும் அங்கிருந்தான். ரோஜாச் செடியிலிருந்து மலரைப் பறிக்கையில் அருகிலிருந்த முள் ஒன்று அவள் விரலில், 'சுரீர்' என்று குத்தவே, முத்துப்போல், அந்த இடத்தில் செக்கச் செவேல்' என்று ஒரு பொட்டு ரத்தம் கசிந்தது. ஸரஸ்வதி கையை உதறிக்கொண்டாள். "த்ஸொ ... த்ஸொ ... முள் குத்திவிட்டதுபோல் இருக்கிறதே. ஆழமாகக் குத்திவிட்டதா என்ன?" என்று கவலையுடன் விசாரித்தான் சந்துரு. அவள் பட்டுப்போன்ற கையைப் பார்த்துக்கொண்டே. "இல்லை.....ஆமாம் குத்திவிட்டது. கொஞ்ச நேரத்தில் சரியாகப் போய்விடும்" என்றாள் ஸரஸ்வதி.
மேலே என்ன கேட்பது, எதைப்பற்றிக் கேட்பது என்று புரியாமல் சிறிது நேரம் அவள் முகத்தையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தான் சந்துரு. ஸரஸ்வதி 'சர சர' வென்று மலர்களைப் பறித்துக் கூடையில் நிரப்பிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
மறுபடியும் அன்று மாலையே ஒரு சந்திப்பு. மங்களம் வெகுவாகக் கேட்டுக் கொண்டதன் பேரில் ஸரஸ்வதி பாடுவதற்கு உட்கார்ந்தாள். சில பாட்டுகளைப் பாடிய பிறகு, ஸரஸ்வதி வீணையை உறையிலிடுவதற்கு ஆரம்பித்தபோது மங்களம் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்:
"ஷண்முகப் பிரியா” ராகத்தை நீ வாசித்தால் அற்புதமாக இருக்கிறது. கல்யாணத்தின் போது