கல்யாணம் செய்து கொள்ளும்படி அப்பா மைசூரில் பன்முறை கேட்டாரே. இன்றைக்கு 'சரி'யென்று தலை அசைத்தால் கல்யாணம் நடந்துவிடும். அப்பாவை அழைத்து வந்து இந்தப் பேதைப் பெண்ணைக் காட்டாமல் போனேமே. வாழ வழி தெரியாமல் ஆயிரக் கணக்கில் பரிதவிக்கும் தமிழ் நாட்டுக் கன்னிகைகளைத் தங்கம் ஒருத்தியின் மூலமாகப் பார்த்துவிடலாம். இப்படி இருக்கும் போது எனக்கு என்ன கல்யாணத்துக்கு அவசரம்? பணமில்லையா? அழகில்லையா? எனக்குக் கல்யாணம் நடக்காமல் போய்விடுமா? தங்கத்துக்குத்தான் முதலில் வாழ வழி செய்யவேண்டும். ஆமாம்!' என்று ஸரஸ்வதி தனக்குள் பேசிக்கொண்டாள்.
மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டிருக்கும் தங்கத்தின் முகத்தைப் பரிவுடன் நிமிர்த்தி, "தங்கம்! கட்டாயம் உனக்குக் கல்யாணம் நடக்கும். உனக்கு நல்ல கணவன் கிடைப்பான். என் மனம் அவ்விதம் கூறுகிறது. அதை நம்புகிறேன். அழாதே அம்மா!" என்று தேற்றினாள்.
தங்கம் மறுபடியும் தன் முத்துப் போன்ற பற்கள் தெரிய நகைத்தாள்.
”இந்த ஊரில் உள்ள குடியான ஜனங்களும் அப்படித்தான் சொல்கிறார்கள், அக்கா. அர்ச்சுனராஜா மாதிரி எனக்குப் புருஷன் கிடைப்பானாம். திடமான நம்பிக்கையுடன்
சொல்கிறார்கள்; நீயும் சொல்கிறாய் அக்கா!" என்றாள்.
ஸரஸ்வதி அர்த்த புஷ்டியுடன் தலை அசைத்து, "ஏழை ஜனங்கள் உள்ளார்ந்த அன்புடன் கூறும் வாக்கு பொய்க்காது. உள்ளம் நிறைந்து பேசுகிறார்கள். தங்கள் எதிரில் வளர்ந்து பெரியவளான நீ நன்றாக வாழவேண்டும் என்று விரும்பு கிறார்கள்" என்று கூறினாள்.
சோர்ந்திருந்த தங்கத்தின் மனத்தில் உற்சாகம் குமிழியிட்டது. ”அக்கா! நீயும், நானும் சேர்ந்து பாடி எவ்வளவு நாட்களாயின? பாடலாமா அக்கா?" என்று கேட்டாள்.
"ஆஹா, பாடவாம்"" என்று ஸரஸ்வதி ஆமோதித்ததும் அந்த வீட்டுக் கூடத்திலிருந்து இன்னிசை பெருகியது.
”பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான். ..."
பாடிக்கொண்டே தங்கம் சிந்தித்தாள். 'பரம ஏழையாகிய எனக்கு நல்ல கணவனாக ஒருவன் கிடைப்பான் என்று ஸரஸு அக்கா சொல்கிறாள். மாயமாக அந்த 'ஒருவன்' என்று வருவானோ? அவன் எப்படிப்பட்டவனோ? முருகவேள் அதற்குக் கிருபை செய்வானா?" என்று பலவாறு நினைத்தாள் அவள்.
நல்லவர்களை வாழ்விக்கும் இறைவன் அருள் புரிந்தான். தெருவில் வந்து நின்ற வண்டியிலிருந்து சந்துரு இறங்கி உள்ளே வந்தான். இதுவரையில் அறையில் உட்கார்ந்திருந்த ரகுபதி, தங்கமும், ஸரஸ்வதியும் பாடுவதைக் கேட்டுக் கூடத்தில் வந்து உட்கார்ந்திருந்தான்.