Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை (காதல் நவீனம்) - 02 - சாவி
முதல் உதவிப் பெட்டியை எடுத்து வர ஓடிய பெண்கள் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் திரும்பி வராமற் போகவே, ராஜாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த பாரதியை வெட்கம் சூழ்ந்து கொண்டது. அதுவரை அவளுக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையில் நின்று கொண்டிருப்பதின் விபரீதம் புரியவில்லை. நேரமாக. ஆகத்தான் அவள் அதை உணர்ந்தாள். நெஞ்சு படபடக்க, அவர்கள் வருகிறார்களா என்று கவலையோடு திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள். ராஜாவும்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வந்துவிடப் போகிறார்களே என்ற கவலையோடு!
அப்போது அந்த ஹாலில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருமே இல்லை.
ராஜா பாரதியிடம் ஏதாவது பேச வேண்டுமெனத் துடித்தான். ஆனால் என்ன பேசுவதென்று புரியவில்லை.
சினிமாக்களில் வரும் காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் நேரங்களில் என்ன பேசிக் கொள்வார்கள் என்று யோசித்துப் பார்த்தான். தமிழ்ப் படங்களாயிருந்தால், தத்துப் பித்தென்று ஏதோ பேசிக் கொண்டிருப்பார்கள்; அல்லது 'டூயட்' பாடியபடியே ஒருவரை யொருவர் துரத்திப் பிடிப்பார்கள். அவர்கள் தங்கள் இரட்டை நாடிச் சரீரத்தைச் சுமந்து கொண்டு அந்தப் பாட்டு முடியும்வரை காடு மேடெல்லாம் ஓடிக் களைத்து வியர்த்துப் போகும் நேரத்தில் 'இன்டர்வல்’ விட்டுவிடுவார்கள். ஹிந்தி நடிகர்களாயிருந்தால், அவர்கள் பேசுகிற பாஷையே நமக்குப் புரியாது. ஆங்கிலப் படமா யிருந்தாலோ காதலன் காதலியின் முகத்தருகே தன்னுடைய முகத்தைக் கொண்டுபோய் ரகசியக் குரலில், ’ஐ லவ் யூ' என்பான். அவளும் அவனது இரு தோள்களைப் பற்றிக்கொண்டு அதே வார்த்தையைத் திருப்பிக் கூறுவான். இதற்குள் அவர்கள் ஒரு டஜன் முத்தங்களைப் பறிமாறிக் கொண்டிருப்பார்கள். இவ்வளவுக்கும் பிறகு ‘ஐ லவ் யூ" என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் கூறித் தங்களுடைய காதலைப் பிரகடனப்படுத்துவார்கள்.
இந்த முறைகள் எதுவுமே ராஜாவுக்குப் பிடிக்கவில்லை. பேச்சே வேண்டாம். பாரதியின் மாந்தளிர் போன்ற விரல்கள் தன் கையைப்பற்றிக் கொண்டிருப்பதே அவனுக்குச் சுகமாயிருந்தது. பாரதியும் தானும் அதே நிலையில், அதே போஸில், சிலையாக மாறிக் காலமெல்லாம் அப்படியே நின்று கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால், அடுத்த கணமே 'ஊள ஹம்; கூடாது; சிலையாக மாறி விட்டால் உணர்ச்சியில்லாமல் அல்லவா போய்விடும்? என்று எண்ணினான்.
பாரதிக்கு ராஜாவிடம் அந்தரங்கத்தில் அன்பு இருந்த போதிலும், அவனுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைந்த போதிலும், தனிமையில் அவனுடன் இருப்பது தன் பெண்மைக்கு இழுக்கு,