கல்கத்தாவிற்குப் போட்டிருந்த டிரங்க் காலை ரத்து செய்துவிட்டு, 'பாரதி' என்று அழைத்தார்.
''என்ன அப்பா?'' என்று கேட்டுக்கொண்டே வந்தாள் பாரதி.
"எனக்கு அவசரமாக வேலை இருக்கிறது. நான் வெளியே போய்விட்டுப் பன்னிரண்டு மணிக்கு வருகிறேன்...''
“பிரின்ஸிபால் சாப்பிட வருவதாகச் சொல்லியிருக்கிறாரே! நீங்க இல்லைன்னா....''
”பரவாயில்லை; முடிந்தால் சாய்ந்திரம் பார்க்கிறேன். எனக்காகக் காத்திருக்க வேண்டாம். அவரைச் சாப்பிடச் சொல்லு...''
உண்மையில் சேதுபதிக்கு எந்த அவசர வேலையும் இல்லை. அவசரமாக அவருக்கிருந்த வேலை கல்கத்தாவுக்கு டெலிபோனில் பேச வேண்டியதுதான். அந்த அவசர வேலையையும் அவசரம் அவசரமாக ரத்து செய்துவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்வதற்கு ஒரே ஒரு காரணம் பார்வதியைச் சந்திக்கக்கூடாது என்பதுதான். அவளுடன் பேச வேண்டும் என்று எவ்வளவுக்கெவ்வளவு அவர் மனம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததோ அவ்வளவுக்கு அவர் அந்த ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே கிளம்பிப் போய்விட்டார்.
அவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் டெலிபோன் மணி அடித்தது. பாரதி ரிஸீவரைக் கையிலெடுத்துப் பேசிய போது பிரின்ஸிபால் பார்வதியின் குரல் கேட்டது.
பாரதி! எனக்கு இப்போது அவசரமாகக் கொஞ்சம் வேலை இருக்கிறது. ஆகையால், நீ எனக்காகக் காத்திருக்க வேண்டாம். மாலையில் நான் வரும்போது உன்னைப் பார்க்கிறேன். விஷ்யூ ஹாப்பி பர்த்டே !'' என்றாள்.
உண்மையில், பார்வதிக்கும் எந்த அவசர வேலையும் இல்லை. சேதுபதி தனக்காகக் காத்திருப்பார். அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் அங்கே போகக் கூடாது நான் வரப் போவதில்லை என்று தெரிந்ததும் அவர் பாரதியிடம் விசாரிப்பார். மாலையில் தன்னைச் சந்திக்கும் போது ஏன் வரவில்லை?' என்று கேட்பார். அப்படிக் கேட்கும்போது அவருக்குத் தன் மீதுள்ள அன்பும் அக்கறையும் வெளிப்படும்! - பார்வதியின் அவசரமான ஜோலிக்குக் காரணம் இதுதான்!
தொழிற்சாலையில் சேதுபதிக்காகப் பல அலுவல்கள் காத்துக் கிடந்தன. ஆனால் அவை எதிலுமே சேதுபதியின் மனம் செல்லவில்லை. மீண்டும் மீண்டும் பார்வதியின் நினைவு ஒன்றே அவர் உள்ளத்தை அலைத்துக் கொண்டிருந்தது.
உள்ளத்தில் வெகு நாட்களாகப் புழுங்கிக் கொண்டிருந்த ஓர் எண்ணம் இமயமாக வளர்ந்து அழுத்துவது போல் தோன்றியது.
’இந்த மனப் போராட்டத்துடன் எத்தனை நாட்கள் வேதனைப் படுவது? மனதிற்குள்ளாகவே