"எங்கள் என்ஜினீரிங் காலேஜ் அதற்காக ரொம்பப் பெருமைப்படும். படகைக் கண்டுபிடித்த அறிவாளியை இந்த உலகத்துக்கு அளித்த பெருமை எங்கள் கல்லூரிக்குக் கிட்டுமல்லவா..."
"போதும் உங்கள் தமாஷெல்லாம் நான் இப்போது ஒரு முக்கியமான கேள்வி கேட்கப் போகிறேன். அதற்குக் கொஞ்சம் ஒழுங்காகப் பதில் சொல்ல வேண்டும்.... தெரியுமா?''
"அதோ பட்டாணி சுண்டல்காரப் பையன் வருகிறான். முதலில் இரண்டு பொட்டலம் சுண்டல் வாங்கிக் கொண்டு விடுகிறேன். அப்புறம் பேசலாம்...'' என்றான் ராஜா.
"உங்களுக்குச் சுண்டல் என்றால் ரொம்பப் பிடிக்குமா? “
"அதெல்லாம் ஒன்றுமில்லை. சுண்டல் வாங்கவில்லை யென்றால், அந்தப் பையன் திரும்பத் திரும்ப இந்தப் பக்கம் வந்து, நம்மையே சுற்றிக் கொண்டிருப்பான்...'' என்று கூறிய ராஜா, அந்தச் சுண்டல்காரப் பையனை அருகில் அழைத்து இரண்டு பொட்டலம் சுண்டலை வாங்கிக் கொண்டான். அந்தப் பையன் அப்பால் போனதும், "...ம்......... இப்போது கேள்வி பதில் சொல்கிறேன்'' என்றான் ராஜா.
பாரதி கேட்டாள்! "இத்தனைப் பெரிய கடலைப் படைத்த கடவுள் எதற்காக இந்தக் கடல் நீரை உப்பாகப் படைத்தார். இவ்வளவு உப்புத் தேவையா?''
"கொஞ்சம் அதிகம்தான்'' என்று கூறிய ராஜா, சுண்டலில் கரித்த உப்பைச் சகித்துக் கொள்வது போல் முகத்தைச் சுளித்துக்கொண்டான்.
பொத்துக் கொண்டு வந்த சிரிப்பைக் 'கலீர்' என்று கொட்டி விட்டாள் பாரதி.
பின்னர், "நான் கேட்கிற கேள்விக்குச் சரியாகப் பதில் கூறப் போகிறீர்களா, இல்லையா?" என்று சற்றுக் கோப மாகக் கேட்டாள்.
"அந்தச் சுண்டல்காரப் பையன் இந்தப் பக்கம் வந்தால் அவனுக்கு நன்றி கூற வேண்டும்'' என்றான் ராஜா.
"ஏன்? 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது பழமொழி. இந்தப் பையனோ சுண்டலில் 'டபிள்' உப்புப் போட்டிருக்கிறான். நம் நன்றியை அவனுக்குத் தெரிவிக்க வேண்டாமா?"
''உங்களால் தாமாஷாகப் பேசாமல் இருக்க முடியாது; என்னால் சிரிக்காமலும் இருக்க முடியாது.''
"நீ சொல்ல நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும். நான் பேசும் பேச்சுக்கெல்லாம் நீ சிரிக்க வேண்டும்..." என்று அப்போதே ஒரு சினிமாப் பாட்டைக் கொஞ்சம் மாற்றிப் பாடினான் ராஜா.
"ரொம்ப நன்றாகப் பாடுகிறீர்களே!"
"இப்போது நாம் இரண்டு பேரும் படகில் பயணம் செய்தால் ஒரு டூயட்டே பாடலாம்'' என்றான் ராஜா.