நானும்...”
சொக்கலிங்கம், சிறிது யோசித்துவிட்டு, அப்புறம் யோசிக்காமலே பேசினார்.
“என்னம்மா நீ, சின்னப்பிள்ளை மாதிரி பேசுற? நாலு பேரு என்ன நினைப்பாங்க? அம்மா, அப்பாவோட கொஞ்ச நேரம் பேசிட்டு, அப்புறமா வா. நீ செய்யுறது தப்பு. அவங்க தான் உன்னைப் பெத்தவங்க. உன்னைப் பார்த்து, அவங்க மனசும் குளிரணும்; கொதிக்கப்படாது. பார்வதி, நான் வரட்டுமா? இவள் அவசரப்படுத்துறாள்னு நீயும் அவசரமாய் வந்துடாதே. நகை பத்திரம். எவனாவது கத்தரி போட்டுடப் போறான்...”
சொக்கலிங்கம் போய்விட்டார்.
மல்லிகாவிற்கு, லேசாகக் கண்ணீர் கூட வந்தது. எவ்வளவு நேரம் இந்த வீட்டில் இருப்பது? ஒரே புழுக்கம்... ஒரே வாடை ஒரே எரிச்சல்... சீ...
மல்லிகாவும், பார்வதியுடன் பந்தியில் உட்கார்ந்தாள். அவளால் சாப்பிட முடியவில்லை. இந்நேரம், தியாகராய நகர் வீட்டில், இடியாப்பம் - குருமா சாப்பிட்டு இருப்பாள்! மிக்சியில் ஆரஞ்சுப் பழங்களையோ அன்னாசிப் பழங்களையோ பிழிந்து ஒரு கிளாஸ் சாறு குடித்து இருப்பாள். சாப்பாடா இது? உருளைக்கிழங்கு அளவிற்கு அரிசி! அதுவும் பாதி வேகாத அரிசி. காம்பு போகாத கத்தரிக்காய் - பொறியலாம். ரசமாம்... சரியான குழாய்த் தண்ணீர்.
மல்லிகாவால் சாப்பிட முடியவில்லை. பார்வதி சாப்பிடுவது போல் பாசாங்கு செய்து கொண்டும், மற்ற பந்தி ரசிகர்கள் முண்டியடித்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டும் இருந்த போது, மல்லிகா, அத்தனை கண்களும் தன்னை மொய்க்கும்படியாக எழுந்தாள். அவள் அம்மா செல்லம்மாவுக்கு, என்னவோ போலிருந்தது. இருந்தாலும், எங்கே போய் கைகழுவுவது என்று தெரியாமல் மல்லிகா திகைத்து நின்ற போது, செல்லம்மா, அவளுக்கு அருகே இருந்த அண்டாப் பாத்திரத்தில் நீர் மொண்டு கொடுத்தாள். பிறகு தன் முந்தானையால், மகளின் வாயைத் துடைக்கப் போனாள். மல்லிகா, முகத்தைச் சுழித்துக் கொண்டே, ஒதுங்கிக் கொண்டாள்.
--------------
தொடரும்