எதையோ வைத்துக் கொண்டு வெளியில், ஒன்றுக்கொன்று சம்பந்த-மில்லாமல் அவன் பேசுவது தெரிந்து போயிற்று. ”உன் புருஷன் உனக்கு என்ன ஆதாரத்தை வைத்து விட்டுப் போயிருக்கிறான்? ஏதோ வேலையில் இருக்கிறான். பிக்கல் பிடுங்கல் ஒன்றும் இல்லை என்று தானே அப்பா உயர்வு என்று உன்னைக் கொடுத்தார்? இப்போது நீ நிராதரவாக ஒரு குழந்தையுடன் நிற்கிறாயே?" என்று அவன் ஏச வேண்டியவன். அப்படி ஏசாமல் ”இனி மேல் என்ன பண்ணப்போகிறாய்" என்று நாசூக்காகக் கேட்கிறான்.
குழந்தைக்குச் சாதம் ஊட்டி முடிந்தவுடன் கையை அலம்பிக் கொண்டு பவானி உள்ளே சென்றாள். பீரோவைத் திறந்து அவளுக்காக அவள் கணவன் வைத்து விட்டுப் போன ஆதாரத்தை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.
அது ஓர் 'இன்ஷூரன்ஸ் பாலிஸி’. மூவாயிரம் ரூபாய்களுக்கு ’இன்ஷூர்' செய்யப்-பட்டிருந்தது. வேறே எந்தவிதமான ஆதாரத்தையும் நம்பி அவள் இருக்க முடியாது. இருபத்தைந்து வயது நிரம்பிய பவானியின் வாழ்க்கைக்கு அந்த மூவாயிரம் ரூபாய் ஒரு ஆதரவா என்ன? அவளும் அவள் குழந்தையும் அதை வைத்துக் கொண்டு சாப்பிட்டாக வேண்டும்: பாலு பெரியவனாகி விட்டால் அந்த மூவாயிரம் ரூபாயிலிருந்து அவனைப் படிக்க வைத்தாக வேண்டும்.
வாழ்க்கையில் அன்றாடத் தேவைகளே அநேகம். ஒரு மாசத்தில் மூவாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவர்களும் உண்டு. அதை ஒரு வருஷத்தில் சம்பாதிக்கிறவர்களும் உண்டு. ஏதோ ஒரு சமயம் என்றால் இருக்கட்டும் என்று எண்ணியே பவானியின் கணவன் மூவாயிரம் ரூபாய்க்குப் ’பாலிஸி' எடுத்துக்கொண்டான். மனைவிக்கும் குழந்தைக்கும் அதுதான் ஆதாரமாக அமையப் போகிறது என்று அவன் கனவிலும் நினைத்தவன் அல்ல. கணவன் மூவாயிரம் சேமித்து வைத்திருப்பதே பவானிக்குத் தெரியாது. மாதச் சம்பளம் நூற்றிருபது ரூபாய் வந்தது. அதில் நூறு ரூபாய் குடும்பச் செலவுக்குக் கணவன் அவளிடம் கொடுத்து விடுவான். மீதி இருபது ரூபாயை அவன் என்ன செய்கிறான் என்பதை அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.
இப்போது பவானியின் தமையன் அந்த மூவாயிரம் ரூபாயடன் அவள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அதை வைத்து பாலுவின் கல்வியை எடை போடுகிறான். 'பூ! அது ஒரு பிரமாதமா? பணமென்று மதிப்பு வைக்காமல் செலவு செய்தால் மூன்றே நாளில் தீர்த்து விடலாம். மதிப்புடன் செலவு செய்தால் மூன்று வருஷங்களுக்குக் காணாது. பிறகு?...' என்று