அதற்குள் பவானி மாலையை நடராஜப் பெருமானுக்குச் சாத்தி விட்டுக் கையில் தட்டுடன் கொல்லைப் பக்கம் போகத் திரும்பினாள். மூர்த்தி தொண்டையைக் கனைத்துக் கொண்டு எழுந்து நின்றான்.
”எங்கே கோவிலுக்கா?" என்று அவளைத் தடுத்துப் பேசினான்.
"ஆமாம்; இன்று கிருத்திகை போய்விட்டு வருவது வழக்கம்"
முன்னைவிட அவள் வார்த்தைகள் சற்று உஷ்ணமாகவே வெளி வந்தன.
”இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?" என்று கேலியாகக் கேட்டான் மூர்த்தி.
”எதில்?" - பவானி திகைத்துப் போய்க் கேட்டாள்.
”கோவிலுக்குப் போகிறதில், அங்கே அவர்கள் இது தான் கடவுள் என்று சொல்லிக் காட்டும் உருவத்தை வணங்குவதில்."
பவானி, கூட்டத்தில் இருந்த நடராஜனின் உருவத்தை ஏறிட்டுப் பார்த்தாள். என்றும் எப்பொழுதும் நிலவும் அந்தப் புன்னகையைக் கவனித்தாள். பிறகு அழுத்தமாக ”உங்களுக்குப் பெற்றோர் இருக்கிறார்களா?" என்று கேட்டாள்.
"ஏன்? அப்பா போய் ரொம்ப காலம் ஆகிவிட்டது. அம்மா சமீபத்தில் நாலைந்து வருஷங்களுக்கு முன்பு தான் காலமாகி விட்டாள்" என்றான் மூர்த்தி.
”அப்படியா? அந்த அம்மாள் தான் உங்கள் தாயார் என்று எப்படி நிச்சயமாகச் சொல்வீர்கள்?"
மூர்த்தியின் முகம் வெளிறியது. ”என்ன? நீங்கள் என்ன சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள்?" என்றான்.
பவானிக்கு கோபம் வந்தது.