ஹும்....... பாவம்! சிறு பிள்ளை ! கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்ததனால், இப்படிக் கண்டபடி பேசிக் கொண்டு அசட்டுத்தனமாக நடக்கிறார் பாவம்! என்று மனத்துக்குள் அனுதாபப்பட்டாள் பவானி. மூர்த்தியைப் போலத் தான் பாலுவை வளர்க்கக் கூடாது.
கொஞ்சம் கண்டிப்பும், மிரட்டலும் அவசியம் தான் என்று நினைத்துக் கொண்டாள்.
சன்னிதியில் தீபாராதனை நடந்தது. விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு பவானியும் பார்வதியும் வெளியே பிராகாரத்தை அடைந்தார்கள்.
யார் முதலிலே பேசுவது. எதைப் பற்றிப் பேசுவது என்று தோன்றாமல் இருவரும் மௌனமாகவே பிரதட்சிணம் செய்தார்கள். ’மூர்த்தி உன் வீட்டுக்கு வந்திருந்தாளா? அவன் ஒரு மாதிரிப் பையன்' என்று சொல்லிப் பவானியை எச்சரிக்க வேண்டும் என்றெல்லாம் பார்வதிக்கு எண்ணங்கள் தோன்றின. ஆனால் யாரைப் பற்றியும் அவதூறாகச் சட்டென்று பேசி விடக்கூடாது என்று தன் மனத்தை அடக்கிக் கொண்டாள் அவள். மூர்த்தி வந்திருந்தான். வருவதைப் பற்றித் தவறில்லை. ஆனால் உலகம் அதைத் தெரிந்து கொண்டு பேசுமா? எனக்குக் கவலையாக இருக்கிறது! என்று பார்வதியிடம் கூறிவிட வேண்டும் என்று பவானி பன்முறை முயன்று தன்னையே அடக்கிக் கொண்டாள். 'சொந்த மருமகனைப் பற்றி மாமியிடமே அவதூறாகப் பேசி விடலாமா?' என்று நினைத்து பவானி எதுவுமே பேசவில்லை.
--------------
தொடரும்