”சம்பந்தத்துடன் தான் பேசுகிறேன். பிறந்த தினத்திலிருந்து பார்த்து வந்தாலும். தாயின் அன்பணைப்பிலே வளர்ந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் கர்ப்பத்தில், அவள் ரத்தத்தினாலும் வளர்ந்ததனால் அந்த நம்பிக்கை வேரூன்றி விட்டதல்லவா? அதைப் போலவே இறைவன் என்னும் மகாசக்தியும் தாயைப் போன்றதுதான். அதைவிட மேலானது. பெற்ற தாய் மகவை மறக்கும் காலமும் உண்டு. ஆனால் நம்மைப் படைத்த ஆண்டவன் நம்மை மறந்தான் என்கிற பேச்சே கிடையாது. கோவில். கடவுள் பக்தி, அரிய பண் பாடு. சீலம், சத்தியம், நேர்மையாவும் நம் உள்ளத்திலே தாயன்பைப் போல வளர்ந்து வேரூன்றி இருக்கிறது. கண்டதைப் படித்து விட்டு, கண்டவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டு, குதர்க்கம் பண்ணாதீர்கள்!" என்று சொல்லிக் கொண்டே பவானி கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு வீதியில் இறங்கிக் கோவிலை நோக்கி நடந்தாள்.
'வெறிச்' சென்று கிடந்த அந்த வீட்டைப் பார்த்தான் மூர்த்தி. கூடத்திலிருந்த நடராஜப் பெருமான் அவனைப் பார்த்துச் சிரித்தார்.
திறந்து கிடந்த கொல்லைப் பக்கமாக பார்வதி பாலுவுடன் உள்ளே வந்தாள். அவள் கையில் ஒரு பாத்திரத்தில் வெண் பொங்கலும், இன்னொரு கையில் மாங்காய் ஊறுகாய் ஜாடியும் இருந்தது.
”பவானி, பவானி, இன்று கிருத்திகை ஆயிற்றே. ராத்திரி நீ சாப்பிடமாட்டாய் என்று நினைவு வந்தது. இதை எடுத்துக் கொண்டு வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள் பார்வதி. அங்கே மூர்த்தி நிற்பதைப் பார்த்ததும், ”நீ எங்கேடா இங்கு வந்தாய்? எங்காவது வெளியே போய் இருக்கிறாயாக்கும் என்றல்லவா நினைத்தேன்? பவானி எங்கே?" என்று கேட்டாள்.
மூர்த்திக்கு நடுக்கம் கண்டது. ”நீ எங்கேடா இங்கு வந்தாய்?' என்ற கேள்வி என்ன சாமானிய மானதா?
’உனக்கு இங்கே என்ன வேலை’ என்கிற அர்த்தம் அதில் புதைந்து கிடந்தது. பார்வதி சமையலறைக்குள் சென்று தான் கொண்டு வந்தவைகளை வைத்து விட்டுத் திரும்பியதும்