பாலுவின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு மூர்த்தி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். திகைத்த உள்ளத்துடன் பவானி பேச முடியாடல் பஸ்ஸில் ஏறினாள். பள்ளிக்-கூடத்துக்குப் போகிறோமே என்று அவள் அன்று சற்று நாகரிகமாக உடுத்திக் கொண்டிருந்தாள். தினம் தலையை வாரி முடிந்து கொள்கறவள் இன்று 'பிச்சோடா' போட்டுக் கொண்டிருந்தாள். கறுப்புக் கரை போட்ட வெள்ளை மில் புடவை கட்டி இருந்தாள். சாதாரணமாக பார்க்கும் போதே எடுப்பாகத் தோற்றமளிக்கும் பவானிக்கு அவை விசேஷ அலங்காரங்களாக அமைந்த மாதிரி இருந்தன, கட்டுக்குள் அடங்காமல் அவள் முன் நெற்றியில் கூந்தல் சுருள்கள் சுருண்டு விழுந்து கொண்டிருந்தன. அவைகளை அவள் எத்தனை முறைகள் கோதிவிட்டுக் கொண்டாலும், மீண்டும் நெற்றியில் விழுந்து அவள் அழகை அதிகப்படுத்தின.
பஸ் புறப்பட்டது. டிக்கட் கொடுக்கிறவரிடம் மூர்த்தி ரூபாயைக் கொடுத்து மூன்று டிக்கெட்டுகள் வாங்கினான். பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் பவானி, பாலு. மூவரும் ஒரு பக்கத்தில் உட்கார வேண்டியிருந்தது. பாலுவுக்கு ஒரு பக்கத்தில் பவானி உட்கார்ந்தாள். இன்னொரு பக்கத்தில் மூர்த்தி உட்கார்ந்தான். பவானிக்கு இவையெல்லாம் சற்றும் எதிர்பாராத சம்பவங்கள்.
மூர்த்தி தடவியிருந்த மருக்கொழுந்து செண்ட்டின் மணம் ’கம்' மென்று நாசியைத் துளைத்தது. பவானி கழுத்து வலியெடுக்கிறமாதிரி ஜன்னல் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். பாலு மட்டும் தொணதொண வென்று ஏதோ மூர்த்தியுடன் பேசிக்கொண்டிருந்தான்.
பஸ் அடுத்த கிராமத்தின் 'ஸ்டாண்டில்' வந்து நின்றது. அங்கேயும் சிற்றுண்டிக் கடைகளும், இளநீர்க் கடைகளும் இருந்தன. அந்த இளநீர்க் கடைக்காரன் கொஞ்சம் வியாபார தந்திரம் தெரிந்தவன். நல்ல வெயிலுக்கு இளநீரில் ஐஸைப் போட்டுக் கொடுத்தான் எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டார்கள். மூர்த்தி பாலுவுக்கு ஒரு டம்ளர் வாங்கிக் கொடுத்துத் தானும் அருந்தினான்.
"உங்க தங்கச்சிக்கும் வாங்கித் தாங்க சார்!' என்றான் கடைக்காரன் மூர்த்தியிடம் பவானியை பார்த்து.
"நோ. நோ! தங்கச்சியா?" என்று அசடு வழியச் சொல்லிவிட்டு, "நீங்கள் சாப்பிடு-கிறீர்களா?"