என்று கேட்டான் பவானியிடம்.
பவானி, 'வேண்டாம்' என்கிற பாவனையாகத் தலையை அசைத்தாள்.
வண்டியில் உட்கார்ந்திருந்த ஒரு ஸ்திரீ பவானியைக் கவனித்தாள்.
"ஏனம்மா! அவர் உன் அண்ணா தானே?" என்று கேட்டாள்.
பவானிக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. 'ஆமாம்' என்று சொல்லி வைப்பதில் என்ன தவறு என்று நினைத்தாள். ஆகவே அவள். 'ஆமாம் அம்மா. அவர் என் அண்ணன் தான்" என்றாள் அவளிடம்.
"அது தானே பார்த்தேன். பின்னே ஏனம்மா நீர் சாப்பிடலே நீ" என்று கேட்டாள் அந்தப் பெண்.
"வரும்போது தான் சாப்பிட்டு வந்தேன்" என்று சுருக்கமாகவே பதிலளித்தாள் பவானி.
வயது வந்த ஒரு வாலிபனும் பெண்ணும் பழகுவதை உலகம் எப்படியெல்லாம் வேவு பார்க்கிறது? அவன் உன் அண்ணனா, மாமனா, தம்பியா என்று கேட்டுச் சமாதானம் அடைகிறது. அண்ணன், தம்பி என்று சொல்லி விட்டால் திருப்தியுடன் தலையை ஆட்டி அந்தச் சகோதர அன்பை ஆமோதிக்கிறது. மாமன் அத்தை மகன் என்று சொல்லி விட்டால் ’உன் புருஷன் எங்கே? ஓகோ, வேறு ஊரில் இருக்கிறாரோ? ஏதோ அலுவலாக இவர்களுடன் போகிறாயோ' என்றெல்லாம் திருப்தியடையப் பார்க்கிறது. யாரோ அன்னியனுடன் ஒரு பெண் பழகுகிறாள் என்றால் அதைப்பற்றி இல்லாததும் பொல்லாதததும் புனைந்து பேசவோ தயங்குவதில்லை .
பஸ் கிளம்புவதற்கு அறிகுறியாக டிக்கெட் கொடுப்பவர் பஸ்ஸுக்குள் ஏறிச் சில்லறை கேட்க ஆரம்பித்தார். வெளியே நின்றிருந்த மூர்த்தி உள்ளே வந்து உட்கார்ந்தான். பஸ் டவுனை அடையும் வரை அவன் எவ்வளவோ முயன்றும் பவானி அவனுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை.
--------------
தொடரும்