விபசாரிகளுக்கெல்லாம் பூச்சுட்டி அழகு பார்க்கப் போகிறானா கல்யாணம்?"
"ஹூம்! அப்படி ஏதாவது இருந்தாலும் தேவலாம். நாடகத்தைப் பார்க்க அருவருப்பாயிராது. இங்கே ஆளுக்கொரு துடைப்பக் கட்டையைத் தூக்கிக் கொண்டு கூத்தடிக்கிறா!"
"அதென்ன கண்ணறாவி?"
"ராமப்பட்டணம் போன்ற ஒரு சிறு பட்டணத்தில் படித்த வாலிபர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லோரும் வேலை நேரம் போகப் பாக்கியை வெட்டிப் பொழுதாய்ப் போக்குகிறார்கள். சீட்டாட்டம், சில்லறைப் பேச்சு. இந்தச் சமயம் கல்கத்தாவிலிருந்து ஒரு பெண் வருகிறாள். அந்த பட்டணத்தில் குடியேறுகிறாள். அவள் மாலை நேரத்தில் ஊரில் உள்ள ஏழைக் குழந்தைகளை அழைத்து வைத்துக் கொண்டு படிப்பு, பாட்டு, டான்ஸ், தையல் வேலை என்று சொல்லித் தருகிறாள். இதைப் பார்த்த அந்த ஊர் வாலிபர்களிடம் மனமாற்றம் உண்டாகிறது. அவர்களும் உபயோகமாக ஏதும் செய்ய நினைக்கிறார்கள். ஊர் சுத்தமாகிறது. குளம் ஒன்று வெட்டியாகிறது. சேரிக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடம் ஒன்று கட்டுகிறார்கள்..."
"இது என்ன பிதற்றல்? வாழ்க்கைக்கு ஒத்து வராத கதை?"
"வாழ்க்கையில்தான் சமூக சேவை என்றால் உடம்பு வணங்கவில்லை. நாடகத்திலாவது செய்து பார்த்து விடுவோமே என்பதால் இருக்கும்!" என்று கூறி சேஷாசலம் பெரிதாகச் சிரித்தார்.
ஒரு போடு!" என்று கூறியபடி கோவர்த்தன்னன் அவர் முதுகில் ஒரு போடு போட்டதும் அவருக்கு அந்தக் கடும் வெய்யிலிலும் உச்சி குளிர்ந்து விட்டது.
அன்று மாலை பவானி ஒத்திகை முடித்து புறப்பட்டபோது, டென்னிஸ் மட்டையை விர்ரென்று சுற்றிக் கொண்டு அவளெதிரே நின்றார் கோவர்த்தனன். "என்ன ஒத்திகை ஒரு வழியாக முடிந்ததா? ஒரு ஸெட் ஆடுவோமா?"
"இல்லை ஸார், ரொம்ப 'டயர்ட்'" என்று கூறியபடியே பவானி கைக்குட்டையால் முகத்தை