ஒற்றிக் கொண்டாள். "நாளைக் காலை வேணுமானால் சந்திப்போம்."
"ஆல்ரைட்" என்றார் கோவர்த்தனன். "சீக்கிரம் வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துக்கொள். கார் தயாராக இருக்கிறது. போவோமா?"
"வேண்டாம். வேண்டாம். எனக்காக நீங்கள் அவசரப்பட்டுக் கிளம்புவானேன்? இருந்து டென்னிஸ் ஆடிவிட்டு வாருங்கள். கல்யாணாம் என்னைப் போகும் வழியில் வீட்டில் இறக்கி விடுவார்" என்றாள் பவானி.
கோவர்த்தனன் தாம் ஆட விரும்பவில்லை என்று கூற முடியாதவராக அவ்விருவரும் இணை சேர்ந்து நடப்பதைப் பார்த்துச் சீற்றப் பெருமூச்சு விட்டபடி நின்றார்.
காரில் போகும்போது, "சுத்த ஃபிராட்" என்றான் கல்யாணம்.
"யாரை இத்தனை நல்ல வார்த்தை கூறி வாழ்த்துகிறீர்கள்?" என்றாள் பவானி.
"எல்லாம் இந்த மாஜிஸ்திரேட்டைத்தான்."
"ஏன், அவருக்கென்ன? மிஸ்டர் கல்யாணம், நீங்கள் அவரை மதிக்காவிட்டாலும் அவர் பதவிக்கு மதிப்புத்தர மறுக்கக்கூடாது" என்றாள் பவானி.
"சரி, உன்னதமான, மதிப்புக்குரிய, அரிய பெரிய, உயர் பதவியில் அமர்ந்திருக்கும் ஃப்ராட் கோவர்த்தனன்! - போதுமா?"
பவானி சிரித்தாள். "என்ன கோபம் அவர்மீது உங்களுக்கு?"
"சொன்னால் நம்புவது கூடக் கஷ்டமாயிருக்கும். ஆனால் நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அந்த மனுஷன் உங்களை விலைக்கு வாங்கி விட்டதாகவே நினைக்கிறார். அவருடன் மட்டும் தான் நீங்கள் பேசிப் பழக லாம், விளையாடலாம். வேறு யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று எண்ணுகிறார். உங்களை நாடகத்தில் கதாநாயகியாகப் போட்டதற்காக என்னைக் கத்தியைக் காட்டி மிரட்டவே செய்தார்!"