"இஸ் இட்? நிஜமாகவா?"
"ஆமாம். ஆனால் நான் அதை லட்சியம் பண்ணவே இல்லை. அவருக்குப் பயப்படவும் இல்லை. அவர் அதிகாரம் எல்லாம் கோர்ட் வரைதான். வெளியே வந்தால் அவர் மாஜிஸ்திரேட் இல்லை. கோவர்த்தனன்."
"அதெல்லாம் சரி. ஒப்புக் கொள்கிறேன். என்றாலும் அவர் என்னிடம் ரொம்ப அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்கிறீர்களே! அதுவும் உங்களுடன் நான் நெருங்கிப் பழகினால் பொறாமைப்படும் அளவுக்கு! ஐ ஆம் த்ரில்ட்!"
அவள் சிலிர்ப்பு அவன் சினத்தைத் தூண்டியது. "வண்டியைத் திருப்பட்டுமா?" என்றான் கல்யாணம் கோபமாக.
"எதற்கு?"
"பாவம்! அவருடன் டென்னிஸ் ஆடாமல் வந்து விட்டீர்களே!"
"ஆமாம், பாவம்!" என்றாள் பவானி. கூடவே, "பரவாயில்லை. இன்றைய ஏமாற்றத்தின் நினைவோடு நாளை விளையாடும் போது அவர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்" என்றாள்.
கல்யாணம் பொங்கிய கோபத்தைக் கார் மீது காட்டினான். அது தன் சக்தியை யெல்லாம் திரட்டிக் கொண்டு அதிகபட்ச வேகத்தில் பாய்ந்தது.
"மெதுவாக ஓட்டுங்கள், குப்பைத் தொட்டியைக் கண்டால் உங்கள் காருக்குக் காதல் பிறந்து விடுகிறது" என்று பவானி கூறியதை அவன் காதில் விழுந்ததாகக் காட்டிக் கொள்ளவே யில்லை.
----------------
தொடரும்...