"என்ன யோசனை? இங்கு வந்து நிற்கிறீர்கள்?" என்றான் கல்யாணம் நெருங்கி வந்து.
"உங்களைக் கணவனாக அடையப் போகிறவள் பாக்கியசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தப் பழைய காரிடம் இத்தனை அன்பு செலுத்துகிறவர் மனைவியை எவ்வளவு பிரியமாக நடத்துவீர்கள்?"
"மனைவி பழகிப் பழசான பிறகு அவளிடம் எனக்கு அன்பு பெருக்கெடுக்கும் என்கிறீர்களா? அல்லது ஒரு கிழவியைப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள் என்கிறீர்களா?"
"இரண்டுமில்லை. இத்தனை பெரிய எஸ்டேட்டை நன்றாகக் கட்டி ஆளக் கூடிய திறன் படைத்தவளாகத் தேடிப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்கிறேன்.
"எஸ்டேட்டுக்கு எஜமானியாவதா முக்கியம்? கணவனின் மனத்தை அன்பினால் ஆளும் சாமர்த்தியமுள்ளவளாக இருப்பதல்லவா விசேஷம்?"
"ஆளுநரையே ஆள்வதற்கு அபாரத் திறமை வேண்டும். நீங்கள் கலகலப்பாகப் பேசும்போதே காரியவாதியாகவும் இருக்கிறீர்கள். இங்கே வந்ததும் வராததுமாக எஸ்டேட் விவகாரங்களில் இறங்கி விட்டீர்களே!"
"இல்லாதபோனால் இங்கே சில ஆசாமிகள் நம்மையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவார்கள். எஸ்டேட்டில் வேலை செய்பவர்களில் நல்ல மாதிரியானவர்களும் உண்டு. பொல்லாதவர்களும் உண்டு.
"பொல்லாதவர்களை ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் வேலைக்கு?"
"அப்படிப்பட்ட சிலரும் நிர்வாகத்துக்குத் தேவைதான். மற்றவர்களுக்கும் பயம் இருக்கும். ஒழுங்காக வேலை செய்வார்கள். ஆனால் அந்தக் குண்டர்களிடம் நாம் ஏமாந்து விடக் கூடாது. தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள்."