நூறு உண்மை. அதோடு வேறு ஒரு விஷயமும் எனக்கு இப்போது தெரிய வந்திருக்கிறது."
"ஆரம்பித்து விட்டீர்களா? புதிதாக ஒரு கதையை?"
"நீங்கள் நம்ப மாட்டீர்கள்; வேண்டுமென்றே நான் மீண்டும் வீண் பழி சுமத்துவதாகக் கருதுவீர்கள். அதனால் உங்களிடம் அது பற்றிப் பேசவே வேண்டாம் என்றுதான் சற்று முன்வரை கூட எண்ணினேன். ஆனால் இப்போது 'என்னிடம் உங்களுக்கு மதிப்புக் குறைந்து போனாலும் பாதகமில்லை; உங்களை அவரிடமிருந்து காப்பாற்றி எச்சரிக்க வேண்டியது என் கடமை' என்று தோன்றுகிறது. நான் ரேடியேட்டருக்குத் தண்ணீர் தேடி வழியில் தென்பட்ட ஒரு கிராமத்துக்குள் நுழைந்தேன் அல்லவா? அப்போது..."
"அப்போது...." பவானியால் ஆவலை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
"அங்கே இரண்டு ஸி.ஐ.டி. க்கள் கிராம மக்களிடம் ஒரு ஃபோட்டோவைக் காட்டி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சிறையிலிருந்து தப்பியோடிய கைதியாம். இந்தப் பக்கம் வந்து தலைமறைவாய் இருக்கலாம் என்று சந்தேகப் படுகிறார்களாம்."
"அந்தப் ஃபோட்டோவை நீங்களும் பார்த்தீர்களா?"
"பார்த்தேன். அந்தப் படத்தில் இருந்தவன் ஏறத்தாழ நம் மாஜிஸ்டிரேட் போலவேதான் இருந்தான். கோவர்த்தனன் மூக்குக் கண்ணாடி போட்டுக் கொள்ளும் வேறு சில ஜாடை மாற்றங்களைச் செய்துகொண்டு மிருக்கிறார். ஆனால் நான் ஏமாறவில்லை. அந்தப் படத்தில் இருந்தது அவரேதான்!"
"இல்லை. இவ்வளவு நெருக்கத்தில் வந்துவிட்டார்கள்; அவர்களாகவே தெரிந்து கொண்டு விடுவார்கள் என்று எண்ணினேன். இன்னொரு காரணமும் உண்டு." "என்ன?"
"மாஜிஸ்திரேட் உங்கள் நண்பர். உங்கள் மதிப்பில் இன்னமும் விழுந்து விடாமல் நிமிர்ந்து நிற்பவர். எனவே உங்களையும் கலந்தாலோசித்துக் கொண்டு....."