"குண்டர்கள் என்றால்....?"
"ஆயிரம் ரூபாய்க்காக ஆறு தலைகளைச் சீவிவிடக்கூடிய முரடர்களும் இந்தப் பகுதியில் இருக்கிறார்கள்!"
"அப்படியானால் மாஜிஸ்டிரேட் சொன்னதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம் என்று சொல்லுங்கள்!"
"கோவர்த்தனனா? என்ன சொன்னார்?"
"'எஸ்டேட்டில் உள்ள ஆட்களை அனுப்பிக் கையைக் காலை முறித்துப் போட்டுவிடுவேன்' என்று அவரை மிரட்டினீர்களாமே?"
"அடப் பாவமே! அப்படியா சொன்னார்? பெரிய கஜப் போக்கிரியாக இருக்கிறாரே? இவனுக்கெல்லாம் மாஜிஸ்டிரேட் உத்தியோகம் வேறு தருகிறார்களே அதைச் சொல்லுங்கள்!"
"மிஸ்டர் கல்யாணம்! நீங்கள் கோவர்த்தனனையோ அவர் வகிக்கிற பதிவியையோ இளக்காரமாகப் பேசுவது தவறு. ஏற்கெனவே ஒரு தடவை உங்களை எச்சரித்திருக்கிறேன். அவரும் மனிதர்தாம். சில குறைகள் அவரிடமும் இருக்கலாம். ஆனால் அதனால் அவர் தம் பதவிப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற மாட்டார் என்று நினைப்பதற்கில்லை."
"நான் எதுவும் சொல்லவே வேண்டாம். கூடிய சீக்கிரம் அவர் சாயம் தானாக வெளுத்து விடும். அப்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்."
"நீங்கள் இருவருமே ஏதோ அசட்டுப் பொறாமைக்கு ஆளாகி ஒருவரை யொருவர் ஏசிக்கொள்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது."
"அவருக்கு என்மீது பொறாமையோ என்னவோ எனக்குத் தெரியாது. அதனால்தான் ஒருவேளை என்மீது வீண்பழிகள் சுமத்துகிறார் போலிருக்கிறது. இருக்கலாம். ஆனால் அவரைப் பற்றி நான் ஏற்கனவே உங்களிடம் கூறியது - அதாவது கத்தியைக் காட்டி விரட்டினார் என்பது நூற்றுக்கு