இல்லை. அங்கு இப்போது குடியேறியிருந்த அரசிளங்குமரிகள் அந்தப்புரமாகவே மாற்றி விட்டிருந்தனர்! சரக்கொன்றை மரம் ஒன்று அவர்கள் மீது பொன் விதானம் விரித்திருந்தது. திரண்டு கொண்டிருந்த கரிய மேகங்கள் காரணமாய் வீரியம் குன்றிய மாலை நேரத்து வெய்யிலையும் அந்த விதானம் வடிகட்டி அனுப்பி அதே காரணத்தால் தனது தங்கத் தோற்றம் மேலும் தகதகக்கக் கண்டது.
அருகிலேயே ஓர் அர்ச மரம் சாமரம் வீசுவதுபோல் அசைந்தாடிச் சலசலத்தது. ராமப்பட்டணத்தை யொட்டியிருந்த பெரியதோர் ஏரி மீதாகத் தவழ்ந்து வந்த மலையமாருதம் இருவர் மேனியையும் குளிர்வித்தது. அடிமரத்தில் ஒய்யாரமாகச் சாய்ந்திருந்த அவ்விருவரும் அரசிளங்குமரிகளா அல்லது வனதேவதைகளேதானா? கமலா தன்னிடமிருந்த சொற்ப ஆடைகளிலேயே மிகவும் புதிதான ஒன்றை அணிந்திருந்தாள். இதை ஒரு விசேஷதினமாகக் கருதி வழக்கத்தை விடச் சிரத்தையுடன் ஒப்பனைகளையும் கவனித்துச் செய்துகொண்டிருந்தாள். பவானி இந்தப் பயணத்துக்காக விசேஷ சிரத்தை ஏதும் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் காட்டவில்லை என்றாலும் சாதாரணமாகவே அவள் நவீன நாகரிகங்களிலும் அன்றைய நாகரிகத்தை அறிந்தவள். ஒன்று பச்சைக் கிளி என்றால் மற்றது மாடப் புறா. ஒன்று மஞ்சள் சாமந்தி, மற்றது இளஞ்சிவப்பு ரோஜா. ஒன்று கும்மிக் கீதம், மற்றது இங்கிலீஷ் டியூன்! ஒருத்தி அல்லி ராணி, மற்றொருத்தி கிளியோபாத்ரா! ஏகந்தச் சூழல் அளித்த சுதந்திர உணர்வு அவர்களை ஏதோதோ மனோராஜ்யங்களில் பறக்கச் செய்தது. அதே சமயத்தில் ஒருவித நெருக்கத்தையும் பிணைப்பையும் அவ்விருவரிடமும் உண்டாக்கி அடிமைப்படுத்தவும் செய்தது.
"மழை வருமோ?" என்றாள் கமலா.
"வரலாம். இம்மாதிரி சில்லென்று காற்று வீசும்போது உன் பக்கத்தில் நான் இருந்து என்ன பிரயோசனம்? கல்யாணம் அல்லவா இருக்க வேண்டும்?" என்றாள் பவானி.
"அக்கா! உண்மையாகத்தான் பேசுகிறீர்களா? அல்லது என்னை ஏமாற்றுகிறீர்களா? அனாவசியமாக என் ஆசைகளை வளர்த்து விட்டால் அது மோதிச் சிதறும்போது என் இதயமும் சுக்கு நூறாக உடைந்து போகும்.
"கமலா! கல்யாணம் உன்னை ஏற்றுக் கொள்வார் என்று என்னால் சத்தியம் செய்து தரவா