முடியும்? ஆனால் கல்யாணம் உன்னை மனைவியாக அடையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பேன். அவர் உன்னை மறுக்க எந்தக் காரணமும் எனக்குத் தோன்றவில்லை.
நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் உங்கள் இல்வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் இனிமையாகத் தங்கு தடையின்றி ஓடும். உங்களை இணைத்து வைக்க நான் என்னால் முடிந்ததை யெல்லாம் செய்வேன்."
"அன்று நீங்கள் வீட்டுக்கு வந்து என் ஆசைக்குத் தூபம் போட்டுவிட்டுப் போனதிலிருந்து நான் இந்த உலகத்திலேயே இல்லை,அக்கா!"
"கல்யாணத்துடன் கரம் கோத்துக் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாயாக்கும்! என்னவெல்லாம் விளையாடினீர்கள்? எல்லாவற்றையும் ஒன்று விடாமல் இப்போது சொல்லியாக வேண்டும் எனக்கு!"
"மகிழ்ச்சிக் கடலில் மிதந்தேன். திடீரென்று அதுவே துயரக் கடலாகவும் மாறியது. அதில் மூழ்கிப் போனேன்."
"துயரமா? என்ன துயரம் உனக்கு?"
"இத்தனை அன்பான ஓர் அக்காவைத் தெய்வமாகப் பார்த்து என்னிடம் அனுப்பி வைத்திருக்கும்போது அவளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவள் மீது சந்தேகித்துக் கோபதாபப் பட்டும் பொறாமையால் வெந்துருகியும் பலவிதமாகச் சபித்தோமே என்று என்னை நானே நொந்து கொண்டு அழுது தீர்த்தேன்!"
இப்படிக் கூறி வரும்போதே கமலா மீண்டும் பொல பொலவென்று கண்ணீர் உகுத்தாள்.
"அசடே! எதற்கு என்னைச் சபித்தாய்? ஏன் இப்போது அழுகிறாய்? நிறுத்து, சொல்கிறேன்" என்று அதட்டும் பாவனையில் பேசிய பவானி தன் புடவைத் தலைப்பால் கமலாவின் முகத்தை ஒற்றினாள்.