பெரிய பெரிய பொட்டலங்களுடன் உள்ளே நுழைந்த காமாட்சி அம்மாள், "அளவு பார்க்கிறேன்னு பழைய துணிக்கு மேலேயே போட்டுக் கொண்டான். அப்புறம் கழற்ற மனசு வரலை. குழந்தைதானே?" என்றாள்.
மாசிலாமணி குதிரை வண்டிக்குக் கூலி கொடுத்துவிட்டுப் படியேறி வந்தார்.
"ஏண்டா, அக்காவுடைய கல்யாணத்துக்கு போட்டுக்க டிரஸ் வாங்கிவிட்டு இப்பவே அழுக்கா அடிக்கலாமா?" என்றாள் கமலா.
"சேச்சே! இதுவா கல்யாண டிரஸ்? அதற்கு ஸூட் தைக்கக் கொடுத்திருக்கு. இது சும்மா பள்ளிக்கூடத்துக்குப் போட்டுக் கொண்டு போகத்தான்" என்றான் விசு.
"கடைத் தெருவையே உன் அம்மா விலைக்கு வாங்கியாச்சு" என்றார் மாசிலாமணீ.
காமாட்சி அம்மாள் கூடத்தின் மையத்தில் அமர்ந்து துணி மூட்டையை அவிழ்த்துத் தன் பட்டுப் புடவையை எடுத்து நெஞ்சோடு வைத்துக் கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டாள்.
"இந்த மாதிரி அழகு பார்க்க உள்ளங்கை அகலக் கண்ணாடி போதாது. ஆளுயர நிலைக் கண்ணாடி தேவை" என்றார் மாசிலாமணி.
"அதுக்கென்ன. மாப்பிள்ளை வீட்டில் இல்லாத கண்ணாடிகளா?"
அவிழ்ந்த மூட்டையில் கூரைப் புடவை தெரிந்தது. பக்கத்தில் ஒரு சிறு நகைக் கடைப் பெட்டியும் இருந்தது. தாலியாகத்தான் இருக்கும். தனது அர்த்தமுள்ள எதிர்காலத்தின் அழகுமிக்க சின்னங்கள் என எண்ணினாள் கமலா.
"கமலா! உட்கார்ந்து பாரேன். உனக்குப் பிடிச்சிருக்கா என்று" - மாசிலாமணி தூண்டவே கமலா அமர்ந்து புடவையைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். "ரொம்ப பிடிச்சிருக்கு அப்பா. அம்மா தேர்ந்தெடுத்தால் குறை இருக்குமா என்ன?"