(Reading time: 7 - 13 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

அவள் குரலில் தொனித்த திருப்தி மாசிலா மணியைத் துணுக்குற வைத்தது. 'இது என்ன, இந்தப் பெண் சிறுமியாக இருந்த போது கல்யாண விளையாட்டு விளையாடினாளே, அதுதான் இதுவும் என்று நினைக்கிறாளா? அல்லது காணாததைக் கண்ட மகிழ்ச்சியில் பேசுகிறாளா?'

  

"வீட்டுக்காரர் வந்துவிட்டுப் போனார், அப்பா!"

  

"படிப்புத்தான் வரலையே தவிர கமலா கெட்டிக்காரிதான். 'வீட்டுக்காரர்' என்று இரண்டு அர்த்தம் தொனிக்கப் பேசுகிறாள் பாருங்க" என்றாள் காமாட்சி.

  

"கல்யாண அழைப்பிதழ்களை அச்சடித்து விட்டாராம். கொண்டு வந்து கொடுக்க வந்தாராம். நீங்கள் இல்லாததால் என்னிடம் தந்து விட்டுப் போனார். - சொல்லிக்கொண்டே கட்டோடு அவற்றை எடுத்து வந்தாள் கமலா. "அளவாகத்தான் அச்சடித்தாராம். அதுவும் இந்த ஊரில் இல்லை. மெட்ராஸுக்கு எழுதி அச்சடித்துத் தபாலில் அனுப்பச் சொல்லியிருக்கிறார். இந்த ஊரில் யாருக்கும் அழைப்பிதழ் தர வேண்டாம் என்று சொல்லச் சொன்னார். வெளியூரில் இருக்கிற நெருங்கிய உறவுக்காரர்களுக்கும் முக்கிய நண்பர்களுக்கும் மட்டும் அனுப்பச் சொன்னார். இல்லாத போனால் ஊர் வம்பை விலைக்கு வாங்கியதாகும் என்றார்."

  

"ரொம்ப சரி, யாரைத் தெரியும் நமக்கு இந்த ஊரிலே? எஞ்சி மிஞ்சிப் போனால் அந்த ராங்கிக்காரி பவானி; அவளைவிட்டால் அந்தப் பிள்ளையாண்டான் கல்யாணம். இவர்களுக்குத் தெரிவிக்கலைன்னா என்ன குடிமுழுகிப் போயிடும்? டேய், விசு! நாளைக்குப் பள்ளிக் கூடத்தில் போய் என் அக்காவுக்குக் கல்யாணம் என்று டமாரம் அடித்து வைக்காதே! பிச்சு இழுத்துப்பிடுவேன். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் கல்யாணம் நடந்து முடியணும்" என்றாள் காமாட்சி.

  

இதற்குள் கட்டைப் பிரித்து ஓர் அழைப்பிதழை எடுத்துப் பிரித்துப் படிக்க ஆரம்பித்திருந்தார் மாசிலாமணி.

  

"......திருநீர் மலை க்ஷேத்திரத்தில் நடக்கிறபடியால், தாங்கள் இஷ்டமித்திர பந்துக்களுடன் வந்திருந்து......"

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.