"அப்பா, தேதி என்ன என்று படித்தீர்கள்?" என்று கேட்டான் விசு. "நாடகம் நடக்கிற அதே தேதியா?"
"ஆமாம், அதனால் என்னடா? டிக்கெட்தான் கிழிந்து போய்விட்டதே!"
"அந்த ஓசி டிக்கெட் கிழிந்தால் என்ன? நாலு டிக்கெட் காசு கொடுத்து வாங்கிக்க நமக்குத் தெரியாதாக்கும்" என்றாள் காமாட்சி.
அவள் அப்போது பாக்கிப் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தாள்.
நாடகம் நடக்கும் தினமே நல்ல முகூர்த்த நாளாக அமைந்தது ரொம்ப வசதி என்று ரங்கநாத முதலியார் கருதியிருப்பார் என்பது கமலாவுக்குப் புரிந்தது. ராமப்பட்டணம் ஊரே நாடக அரங்கேற்றம் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கும். இளைஞர்களின் சிந்தனையெல்லாம் அங்கே ஒருமுகப்பட்டிருக்கும் போது இவர்கள் முதல்நாள் திருநீர் மலைக்குக் கிளம்பிச் செல்வதை யாரும் கவனிக்கமாட்டார்கள். வாலிப மிடுக்குடைய சீர்திருத்தவாதிகளின் முட்டுக்கட்டை ஏதுமின்றித் திருமணம் 'ஜாம்ஜாம்' என்று நடந்தேறும்!
"என்னடா, பிரமாத நாடகம்? கமலாவின் கல்யாணம் நடந்து முடியட்டும். தினம் ஒரு நாடகம் அல்லது சினிமா பார்க்கலாம்" என்றாள் காமாட்சி.
"என்ன தான் இருந்தாலும் 'கணையாழியின் கனவு' நாடகம் போல் ஆகுமா அப்பா? இவர் இரண்டாவது முறை நாடகம் போடறாளோ இல்லையோ? கல்யாணம் மாமாவும் பவானி அக்காவும் சேர்ந்து நடிக்கறதை மறுபடியும் பார்க்க முடியுமோ என்னவோ?"
அந்த விநாடியில் கமலாவின் நெஞ்சில் ஒரு வேதனை ஏற்பட்டது. 'தனக்குத் திருமணம் நிச்சயமாகி பிடித்தமான ஓர் எதிர்காலமும் உறுதியான பிறகும் தன் மனம் இவ்வாறு சங்கடப்படக் கூடாது; பவானி அக்காவும் கல்யாணம் மாமாவும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்று தம்பி கூறியதுமே ஒரு துன்பம் இதயத்தை ஊடுருவக் கூடாது; இது தவறு' என்று அவள் நினைத்தாள். ஆயினும் அவள் அறிவு கூறியதை மனம் ஏற்காமல் தொடர்ந்து துயரப்பட்டுக் கொண்டுதான் இருந்தது!
----------------
தொடரும்...