செய்தவனாவேன்."
"அவரா உனக்குச் சம்பளம் தருகிறார்? நகரு!"
மணி அப்பால் சென்று துணிப் பையை மடித்துக் கொண்டே பேசினார். "இன்று நீங்கதான் சம்பளம் கொடுக்கிறீங்க. ஆனா என் பன்னிரண்டாவது வயதிலிருந்தே உங்க அப்பாகிட்டே வேலை செய்து வந்தவன் நான். 'மணி! கோவர்த்தனன் தெற்கே துணையில்லாமல் போகக் கூடாது என்பதற்காகத்தான் உன்னையும் பின்னோடு அனுப்பறேன். எவ்வளவு நல்லவனானாலும் தனியே இருக்கும்போது மனசு சில சமயம் தடுமாறிப் போய்விடும். அவன் பிறந்த தினத்திலிருந்தே அவனை உனக்குத் தெரியும். அவனுக்குச் சமைத்துப் போடுவது மட்டும் உன் வேலை இல்லை. என் ஸ்தானத்திலிருந்து அவனை நீ கவனித்துக் கொள்ளணும்' என்றார்.
"லெக்சர் முடிந்ததா?" - கேட்டுக் கொண்டே அலமாரிக்குள்ளிருந்து ஒரு கண்ணாடிக் கோப்பையை எடுத்துத் தன் நெஞ் சுயரத்துக்கு வந்த அலமாரியின் மேல் பரப்பில் வைத்தார் கோவர்த்தனன். அடுத்து விஸ்கி பாட்டிலையும் எடுத்து வைத்துவிட்டு, சோடா ஒன்றை உடைத்தார்.
"எனக்கு இங்கே சில வார்த்தைகளைக் கூறச் சந்தர்ப்பம் அளித்தமைக்காக நன்றி கூறி விடைபெறுகிறேன், வணக்கம்" என்று சொற்பொழிவை முடித்தார் மணி.
கோவர்த்தனன் சிரித்தார்.
"குளிக்க வெந்நீர் ரெடி; சாப்பாடும் தயார்!"
"வெந்நீரில் நீ குளி. உனக்குத்தான் பச்சைத் தண்ணீர் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. வெய்யில் காலத்திலும் வெந்நீர் வேண்டும். எனக்கு எதற்கு? இப்பத்தான் டென்னிஸ் ஆடிட்டு வந்தேன். வியர்வை அடங்கியதும் குளித்துவிட்டுச் சாப்பிட வரேன். நீ போய் டேபிளை 'அரேஞ்ச்' பண்ணு." மணி சென்றதும், கோவர்த்தனன் மீண்டும் அலமாரிக்குள் கண்ணோட்டம் விடக் குனிந்தார். அதில் ஃபிரேம் போட்டு நிமிர்த்தி வைத்திருந்த பவானியின் இரு படங்களையும் எடுத்து அலமாரி மீது பார்வையாக வைத்தார். மதுவை அருந்தியபடியே அவற்றை மாறி