வினாடிப் போதில் மாறிவிடும். பவானியின் வெள்ளி மணி நாதச் சிரிப்பொலி இவற்றில் நிரம்பி மங்களகரமாகி விடும். சூன்யங்கள் ஓவியங்களாகும், வறட்சிகள் அருவிகளாகும்; இருள்கள் நிலவுகளாகும்; வெம்மைகள் தண் புலன்களாகும்!
எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு, ஏதோ சதி செய்கிறார்கள். தமக்குத் துரோகம் இழைக்கிறார்கள். நியாயமாகவும் இயல்பாகவும் தமக்குக் கிடைக்க வேண்டிய மகிழ்ச்சிகளை இல்லாமல் செய்து நெஞ்சில் அடிக்கிறார்கள்!
அவர் மதுவை இன்னும் ஒரு மிடறு விழுங்கினார்.
"வெறும் வயிற்றில் அதைக் குடிக்க வேண்டாம். கெடுதல்; சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமென்றால் இதை அவ்வப்போது கொரித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி ஓர் அகன்ற கிண்ணத்தில் மிக்சர் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனார் மணி. நெய் விட்டுப் பொன்னிறமாக வறுத்த முந்திரிப் பருப்புக்களைத் தாராளமாகவே அதில் கலந்திருந்தார்.
பெரிய வெள்ளி ஸ்பூனில் அதைச் சிறிது அள்ளி வாயில் போட்டுக் கொண்ட கோவர்த்தனன் நெஞ்சோடு அணைத்திருந்த பவானி யின் படத்தை எதிரே பிடித்துப் பார்த்தார். 'பவானி! ஏன் என்னை இப்படிச் சித்திரவதை செய்கிறாய்? உன் மனம் கொஞ்சம் இரங்கினால் போதும். என் வாழ்க்கை எத்தனை ஆனந்த மயமாகி விடும்! உன் கண்கள் தரும் போதைக் கிறக்கம் இருக்கும்போது மதுவை நான் ஏன் நாடப் போகிறேன்? மணிக்கு என்னைக் கோபித்துக் கொள்ளக் காரணமே அகப்படாமல் தவிப்பான், பவானி!"
வாசலில், "ஸார்!" என்று குரல் கேட்டது.
கோவர்த்தனன் கோப்பையைக் காலி செய்து வைத்து விட்டு, "யார் அது?" என்று கேட்டவாறே எழுந்தார்.
----------------
தொடரும்...