மாறிப் பார்த்தார். ஒன்றில் அவள் வக்கீல் உடையில் இருந்தாள்; மற்றொன்றில் டென்னிஸ் உடையில் கையில் மட்டை ஏந்தி நின்றாள். உதடுகளைக் குவித்து இரு படங்களையும் நோக்கிக் காற்றை முத்தமிட்டார்.
கோவர்த்தனன். பிறகு டென்னிஸ் உடையிலிருந்த பவானி படத்தை ஒரு கையில் எடுத்துக்கொண்டு மற்றொரு கரத்தில் மதுக் கோப் பையுடன் நடந்து சென்று சோபாவில் அமர்ந்தார்.
அந்தப் படங்களைத் தருமாறு அவர் முதலில் பவானியைத்தான் கேட்டார். அவள் கண்டிப்பாக மறுத்துவிடவே அவர் வேறு வழியை நாட வேண்டியதாயிற்று. கிளப் ஸூவனியரில் போடுவதற்காக எடுக்கப் பட்ட படங்கள் அவை என்பது கோவர்த்தனனுக்குத் தெரியும். அவற்றை எடுத்த ஸ்டூடியோ சொந்தக்காரரையும் தெரியும். வெகு சுலபமாக, பவானிக்குத் தேவை என்று கூறியே அவற்றுக்கு மறு பிரதிகள் போட்டுக் காசு கொடுத்து வாங்கி வந்து விட்டார். ஃபிரேம் போட்டும் வைத்துக் கொண்டார்.
பவானி இப்போதெல்லாம் அடிக்கடி டென்னிஸ் ஆட வருவதில்லை. ஒரு நாள் வந்தால் இரண்டு தினங்கள் நாடக ஒத்திகையின் தீவிரத்தைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொண்டாள். மாஜிஸ்டிரேட் வேறு யாருடனாவது ஆடிவிட்டு வீடு திரும்ப வேண்டியிருந்தது. அவளுடன் ஆடும்போது ஏற்படாத சோர்வு வேறு யாருடனாவது ஆடி விட்டு வந்தால் உண்டாயிற்று. எதையோ பறிகொடுத்து விட்டுத் திரும்புவது போல் காணப்படுவார் கோவர்த்தனன். பவானி கல்யாணத்தைக் காதலிக்கிறாள் என்பதற்கோ அல்லது தம்மை வெறுக்கிறாள் என்பதற்கோ எந்த விதமான சாட்சியமும் மாஜிஸ்டிரேட் டுக்குப் புலப்படவில்லை. என்றாலும் அவள் தம்மை விட்டு விலகி விலகிப் போவதுபோல் கோவர்த்தனனுக்கு ஒரு பிரமை ஏற்பட்டது. இந்த இழப்பை மறக்கத்தான் அவர் மதுவின் துணையை நாடினார். கிளப்பில் ஆரம்பித்த பழக்கம் வீட்டுக்கே குடிவந்து விட்டது. மணியை விட்டே சோடாவும் ஸ்காச் விஸ்கியும் வாங்கிக் கொண்டு வந்து வைக்கச் சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது.
அந்தப் பெரிய வீட்டில் தாம் தன்னந் தனியாக இருக்க நேரிட்டதை ஏதோ பெரிய துர்ப்பாக்கியமாகக் கருதினார் கோவர்த்தனன். பவானி மட்டும் இங்கே தம்முடன் இருக்குமாறு வந்துவிடக் கூடுமானால் இந்தப் பெரிய வீட்டில் தனிமை அவரைத் திரும்பிய பக்கமெல்லாம் தாக்காது. வீடு மட்டுமல்ல; வாழ்க்கையே வெறுமையும் வெற்றிடமு மாகத் தோன்றும் நிலை